Monday, March 15, 2004

ஏன் எழுத?

ஏன் எழுத வேண்டும்?
'ஏன் எழுத வேண்டும்?' என்ற கேள்வி எனக்கு மிகவும் பெரியதாகத் தோற்றமளிக்கிறது. இப்போது மட்டுமல்ல எப்போதுமே, எழுதுவது, பேசுவது போன்ற காரியங்களுக்கு உண்டான காரணங்களைத் தேடுவதிலேயே, அவற்றைச் செய்வதற்கான வாய்ப்புகள் பலவற்றை இழந்திருக்கிறேன். அவை குறித்து வருத்தமொன்றுமில்லை என்பது ஒரு புறமிருக்கட்டும்.

ஒரு மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் ஒரே மாதிரியான கருத்துக்களைக் கொண்டிருப்பதில்லை. நேற்று வரை பெரிய விஷயமாக எண்ணிக் கொண்டிருந்த ஒன்றை இன்று நான் முற்றிலுமாக அலட்சியம் செய்யுமளவு எண்ணங்கள் மாறுகின்றன. அதிகமாகப் படிப்பவர்களுக்கு இது இன்னும் அதிகமாக இருக்குமென்றே நம்புகிறேன். குழப்பம் மிக்கவர்களுக்குத்தான், தெளிவு இல்லாதவர்களுக்குத்தான் இது நிகழும் என்றும், மன உறுதியும், தெளிவும் உள்ளவர்க்கு இது போன்ற நிலை ஏற்படத் தேவையில்லை என்றும் கூறலாம். அவர்களுக்கு ஒருவேளை, இது அடிக்கடி நிகழாமல் போகலாம். ஆனால், கருத்துக்களில் மாற்றம் கட்டாயம் ஏதாவதொரு கட்டத்தில் நிகழும் ஒன்று என்பது எனது எண்ணம்.

இப்படியிருக்க, இன்று நான் (உலகமே தவறென்று மறுத்தாலும்) சரியென்று கருதுவன, நாளை என்னாலேயே நிராகரிக்கப்படக் கூடிய சாத்தியங்கள் நிறைந்த சூழலில், நான் ஏன் எழுதி மற்றவர்களது எண்ணங்களை ஆக்கிரமிக்க முயல வேண்டும்? அல்லது, நான் ஆக்கிரமிப்புக்காகவன்று, அங்கீகாரத்துக்காக மட்டுமே எழுதுகிறேன் என்பேனாகில், எனது அங்கீகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்பதே ஐயத்துக்குரியதானபோது, பிறரது அங்கீகாரம் பெற்றுத்தான் என்ன பயன்?

இங்கு ஒரு விஷயம். இவையெல்லாம், நான் காலையில் என்ன சாப்பிட்டேன்; என்ன நிறத்தில் உடுத்தினேன்; எந்த நண்பருடன் அல்லது நண்பியுடன் குடித்தேன் என்றெல்லாம் எழுதும்போது வரக்கூடிய பிரச்சினைகளே அல்ல. பொழுதுபோக்குக்காக, நண்பர்களுடன் தொடர்பை வளர்த்துக் கொள்ளுவதற்காக, அயல்நாட்டிலிருந்து கொண்டு தமிழுடனான, தமிழருடனான உறவை வலுப்படுத்தும் விஷயமாக எழுதும்போது இவையும் அவரவரைப் பொறுத்த மட்டில் மிகவும் பயனுடையவையே. இவற்றில் மிகப்பல சுவாரசியமானவையாக இருக்கின்றன என்பதும் உண்மையே. சிலர் இவற்றினூடே, தங்களது உயர்ந்த கருத்துக்களையும், அல்லது நல்ல சிந்தனைகளுக்கு வித்திடுகின்ற விஷயங்களையும் எழுதுகிறார்கள் என்பதிலும் ஐயமில்லை.

எனக்கு அவ்வாறு எழுத வேண்டும் என்று தோன்றவில்லை. சரி, அப்படி எதைத்தான் எழுதப் போகிறேன் என்றால், அதையும் இன்னும் முடிவு செய்யவில்லை. அதுதான் ஏன் எழுத வேண்டுமென்ற கேள்வியில் நிற்கிறேனே? மறுபடியும் அந்தக் கேள்விக்குப் போவோம்.

இப்போது எனது அறிவுக்கு எட்டிய விஷயங்கள் இரண்டு.
1. உலகத்தைத் திருத்த வேண்டுமென்று எழுத வேண்டியதில்லை. ஏனெனில், எனது கருத்து தவறென்று நாளை எனக்கு உதயமாகலாம்.
2. அங்கீகாரத்திற்காக எழுத வேண்டிய அவசியமுமில்லை. அதே காரணம்.

கண்டு பிடிப்போம்...

முன்னுரை மீண்டும்

இந்த வலைப்பூ ஆரம்பித்த விவரத்தை இன்னும் நண்பர்களிடம் சொல்லவில்லை. காரணங்கள் உள. இன்னும் எத்தனை நாட்கள் தொடர்ந்து இதில் எழுதுவேன் என்று தெரியாத நிலை. அப்புறம், வாசிப்பவர்களின் கருத்துக்களை உள்ளிடுவதற்கான வழிமுறைகளை எல்லாம் செய்து விட்டு அப்புறம் அறிவித்துக்கொள்ளலாம் என்ற எண்ணம். இதை நிறைவேற்ற வேலைகள் எதுவும் இல்லாத ஒரு வார இறுதி கிட்ட வேண்டும். விரைவில் நிகழும் என்று நம்புகிறேன்.

Saturday, March 13, 2004

என்ன எழுத?

ஆக நானும் வலைப்பூ ஒன்றை என் பெயரில் தொடங்கிக் கொண்டு விட்டேன். இனி, இதில் என்ன எழுதுவது? இந்தக் கேள்விக்குப் பதிலை மிகவும் சீரியஸாக யோசிக்கத் தொடங்கியதால்தான், சென்ற முறை இதைத் தொடராமல் விட்டு விட்டேன்.
இன்று வலைப்பூக்களில் உலவிக் கொண்டிருந்தபோது, அவற்றின் உள்ளடக்கம் குறித்த விவாதம் ஒன்று நிகழ்ந்து கொண்டிருப்பதை அறிந்தேன். அதை அடிப்படையாக வைத்துக்கொள்ளுமளவு உள்ளடக்கம் இன்னும் என்னிடம் இல்லை. எனவே எழுதத் தொடங்குவோம். அதன்பின் தானாக ஒரு வரையறை ஏற்பட்டு விடும் என்று எண்ணுகிறேன்.
ஆக, என்ன எழுதுவது என்ற கேள்வியைத் தந்திரமாக ஒத்திப் போட்டாயிற்று. இதனினும் பெரிய கேள்வி ஒன்று என்னை அடிக்கடி உறுத்துவதுண்டு. அது, 'ஏன் எழுத வேண்டும்' என்பது. நான் எழுதுவது எல்லாம் சுய தம்பட்டமாக ('டப்பா' அடிப்பதாக) முடிந்து விடுகிறதோ என்று ஒரு பயமும் உண்டு. ('இவன் என்ன நிறைய எழுதியதைப் போலப் பேசுகிறானே' என்றெண்ண வேண்டாம். யாருக்கும் தெரியாமல் நிறைய எழுதியிருக்கிறேனாக்கும்) அதையும் மீறி, ஒரு ஒழுங்கான சிந்தனை ஓட்டத்தைத் தடை செய்து, எழுதுவதற்காகவென்றே சிந்தனை செய்ய வேண்டிய நிலை வருவதையும் எண்ணி அருவருப்புடன் பயப்பட வேண்டியிருக்கிறது. அது போக, எழுதுவது பொழுதுபோக்கு என்றொரு நிலையும் வராதிருக்க வேண்டும். முனிவர் வீட்டில் பூனை, பசு, வேலைக்காரி, மனைவி, குழந்தை என்று சேர்ந்ததொரு கதையைப் போல, இந்த வலைப்பூ, அதன் பராமரிப்பு எல்லாம் தொல்லையாகி விடுமோ அல்லது மயக்கம் தரும் விஷயமாகி விடுமோ என்றொரு தயக்கமும் உண்டு.
எனவே நான் எழுதுவது பொழுதுபோக்கன்று; எழுத வேண்டும் என்பதற்காகவுமன்று; எதையோ தேடுவதான பயணத்தில், இளைப்பாறும் வசதி கிடைக்கும் நேரத்தில் அசை போடுவதற்காகவும், மேலும் உள் நோக்கியதான பயணத்திற்கு உதவி புரியும் முகமாகவும் மட்டுமே.
தேடப்படும் பொருள் என்னவென்று ஏற்கனவே சொல்லி விட்டேன். அதை மீண்டும் மீண்டும் சொல்லி அந்த வார்த்தைக்கான முக்கியத்துவத்தைக் கூட்ட விரும்பவில்லை. வார்த்தைகளை அவற்றிற்குரிய இடத்தில் வைப்போம். அதையும் தாண்டியதே எனது தேடல்.

முன்னுரை

நீண்ட நாட்களுக்கு முன்பே ஒரு முறை, வலைப்பூ ஒன்றைத் தொடங்க முயன்றிருந்தேன். அதாவது, ஐந்து மாதங்களுக்கு முன்பு. இப்போது மீண்டும், ஆசை தூண்ட, மறுபடியும் ஒன்றைப் பதிவு செய்திருக்கிறேன். தொடர்ந்து எழுத வேண்டும் என்ற எண்ணமுண்டு.
இதற்குப் பெயர் என்ன வைப்பது என்று யோசிக்கும்போது, தெளிவு என்ற பெயர் மனதில் தோன்றிற்று. அதன் பின் யோசிக்க வேண்டிய அவசியமிருக்கவில்லை. இதைத்தானே தேடிக் கொண்டிருக்கிறேன்.