Sunday, May 06, 2007

அழகே அழகு

ரொம்ப நாளாச்சு இங்க ஏதும் எழுதி. வேலை நிறைய; படிக்கணும்னு வாங்கி வச்ச புத்தகங்கள் நிறைய. தமிழ்மணம். கீற்று எல்லாம் படிக்கறதுக்கே நேரத்தைப் பொறுக்கிச் சேர்க்க வேண்டியிருக்கு. அப்படியே ராசா பக்கம் போய்ப் பார்த்தா, ஏறக்குறைய மூணு வாரத்துக்கு முன்னாடி 'அழகே அழகு'ன்னு உருகியிருக்கார். அதோட விட்டாரா, என்னையும் அதுல இழுத்து விட்டிருக்கார். என்னையும் ஞாபகம் வச்சிருக்கார்ங்கறதுல ரொம்ப மகிழ்ச்சி!

சரின்னுட்டு, நம்ம கண்ணுக்கு எதெல்லாம் அழகுன்னு யோசிக்கப் போனா, சிலது தேறிச்சு. அதை எழுதறக்கு முன்னால, ராசாவை இந்த விளையாட்ல கூப்பிட்ட அனு எதை அழகுன்றாங்கன்னு பாக்கப் போனேன். நம்ம பட்டியல்ல வர்றது எல்லாம் அங்கயும் இருக்கு. என்னடா இது மதுரைக்கு வந்த சோதனைன்னு நினைக்காம, அப்படியே இங்க எழுதிருக்கேன்!

ரெண்டு வாரம் முன்னாடி என் நண்பரோட பொண்ணு நந்தனாவோட ரெண்டாவது பிறந்த நாள் விழாவுக்குப் போயிருந்தேன். அங்க வந்திருந்த குழந்தைகள், அவங்க விளையாட்டு எல்லாம் பாத்துக்கிட்டிருக்கும்போது இன்னொரு நண்பர்ட்ட சொன்னேன். 'சென்னைக்குப் போயிடலாமான்னு வர்ற எண்ணத்தை மாத்த எனக்குத் தெரியிற ஒரே காரணம் இந்தக் குழந்தைகள்தான்'னு. சென்னையில் குழந்தைகள் இல்லன்னு அர்த்தமில்ல. ஆனா, இங்க பழகின குழந்தைகளை எல்லாம் பாக்க முடியாமப் போயிடுமேன்னுதான். ஆக, அழகுன்னு நினைச்சா முதலில் வர்றது குழந்தைகள்தான். 2002-ல வாடகை வீடு பாக்க சாவி கேட்டுக் கீழ் வீட்டுக் கதவைத் தட்டும்போது திறந்த ரெண்டு குழந்தைகள் கிருத்திகாவும், உத்ராவும், அதே கட்டடத்துல இருந்த காவ்யாவும், மனிஷாவும், பக்கத்து வீட்ல இருந்த மேக்னா, இப்போ நண்பர்கள் வித்யா - சாகர் தம்பதியின் குழந்தை நந்தனா, இப்போ மேல் வீட்ல இருக்கிற தெலுங்குக் குடும்பத்துல என்னைப் பாத்து (அல்லது என் தாடியைப் பாத்து) ஏனோ பயப்படுற குழந்தை அப்படின்னு நீளும் பட்டியல். இவங்க மட்டுமில்ல, கடைல, தெருவில அப்படின்னு பல இடங்களிலும் பாக்கிற குழந்தைகள், எந்தவொரு சூழ்நிலையையும் மறக்கடிச்சு என்னையும் குழந்தையா மாத்திடுறதால, அதுதான் பேரழகு.

அப்புறம், யாரையும் அழகாக்கக் கூடிய சக்தி கொண்ட புன்னகை அழகு. அதுவே, குழந்தைகளின் புன்னகை, ஆகா அதுதான் சொர்க்கம்.

2002-ல பிடிச்ச வாடகை வீடுன்றது ஒரு சின்ன அறை, மூணாவது மாடில. இடுப்புல துண்டை மட்டும் கட்டிக்கிட்டு, ஆடி, குதிச்சு, வானம் பார்த்துத் தரையில படுத்துக்கிட்டு, உடம்பு மேல பட படன்னு பலமாவோ, சின்ன சின்ன ஊசி மாதிரி வேகமாவோ, அல்லது வெறும் தூறலாவோ வந்து தழுவுற மழையை அனுபவிச்சதுண்டு. அந்த மழை அழகு.

மழை நின்னப்புறம், தெருவில இறங்கி நடந்துகிட்டே ரோட்டோரம் இருக்கிற மரங்களோட தாழ்ந்த கிளையில இருக்கிற இலைகளை அசைச்சு அந்தத் தூறலில் சிலிர்த்ததுண்டு. பக்தி தலைக்கேறிய காலத்துல கோவில் மணியடிச்சப்போ வந்த உணர்ச்சி, சிலிர்ப்பெல்லாம் கூட கிட்ட வர முடியாதுன்னு தோணுது. மழை இல்லைன்னாலும், இந்த மரங்கள், செடிகளை அப்பப்போ தொட்டுக்கிட்டு, தடவிக் கொடுத்துக்கிட்டு நடக்கறது வழக்கமாயிடுச்சு. நம்ம கண்ணுக்கு அழகா இருக்கணுமேங்கறதுக்காக வெட்டுப்பட்டு நிக்கிற செடிகளைக் கண்டா கண்ணீர் வர்றது மட்டும்தான் குறை. இந்த மரங்கள், கிளைகள், இலைகள், மலர்கள் எல்லாம் அழகு.

அலுவலக வளாகத்துலயும், பூங்காக்கள்லயும், ஒண்ணா உக்காந்துக்கிட்டு, கண்களால பேசிக்கிட்டு, பொய்க்கோபம் காட்டிக்கிட்டு, அன்பையோ ஆறுதலையோ வண்டி வண்டியாக் கொட்டும் கண்களோட பாத்துட்டிருக்கிற ஜோடிகள் அழகு.

பெண்கள் அழகு; மீட்டிங்-ல உக்காந்துக்கிட்டு நான் கிறுக்கிற ஓவியங்கள் அழகு; கன்னட எழுத்துக்கள் அழகு, அதிலயும் வீணை வடிவத்துல இருக்கிற சில எழுத்துக்கள் இன்னும் அழகு; பேருந்தில உக்காந்துக்கிட்டிருக்கும்போது திடீர்னு கேட்கிற பெண்-தமிழ்க் குரல்கள் அழகு.

தமிழ் அழகு. இசை அழகு. இசை, நாட்டியம் அழகு. எல்லாத்துலயும் ஒளிஞ்சிருக்கிற தாள லயம் அழகு. கவிதை அழகு. நியாமான கோபம் பேரழகு. சாந்தமும் அழகு.

காதல் அழகு, நினைவுகள் அழகு. என்ன சொல்ல, வலிகளும் அழகு.

பழைய கோயில்கள் அழகு; பக்தி அழகு; உறவுகள் அழகு; உறவொண்ணும் இல்லைன்னாலும், மனசு கனிஞ்சு வர்ற அன்பு அழகு;

மழையை ரசிச்சு நடக்கும்போது, ஒழுகுற குடிசை வீட்டைப் பாத்தவுடனே, பாடிக்கிட்டிருந்த 'சின்னச் சின்ன மழைத் துளிகள்' பாட்டை நிறுத்த வச்சு, உள்ள அழுற குழந்தையோட சேர்ந்து மனசை அழ வச்சு, மழையோட சேர்ந்து கண்ணீரை ஓட வைக்கிற மனசாட்சி அழகு.

'கூரையின் ஓட்டை வழி நட்சத்திரம்' பாட்டு அழகை ரசிக்கும்போதே, வலிக்கிற மனசு அழகு. தன்கிட்ட இருக்கிற அழுக்கை எல்லாம் உடனே பாத்துக்கிற மனசு பேரழகு. அதுக்கு வழி செஞ்ச அறிவு இன்னும் அழகு. ஆக மொத்தம் எல்லாம் சேர்ந்து அடிக்கிற குழப்பமும் அழகு. அது முடிஞ்சு வர்ற தெளிவும், அதுக்குள்ள இருக்கும் குழப்பங்களும் அழகு. அந்தக் குழப்பங்களை அப்போதைக்காச்சும் மறக்கடிக்கிறது குழந்தையோ, மழையோ, உறவோ, அன்போ, இசையோ எதுன்னாலும் அது அழகு.