Tuesday, May 26, 2009

இலங்கையின் சித்தம்; இந்தியாவின் பாக்கியம்

இந்தியா, பாகிஸ்தான், சவுதி அரேபியா, லிபியா, ரஷ்யா, இந்தோனேசியா, மலேசியா, பக்ரைன், க்யூபா, எகிப்து, நிகரகுவா, பொலிவியா - இவைதான் இலங்கை அரசு ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கழகத்தில் கொண்டு வரும் தீர்மானத்திற்கு ஆதரவு தந்து கையொப்பமிட்டிருக்கும் நாடுகள்.

தீர்மானத்தில் கூறப்பட்டுள்ள இரு பகுதிகள்.

மனித உரிமைப் பாதுகாப்பு என்பது பேச்சுவார்த்தை, ஒத்துழைப்பின் அடிப்படையிலமைய வேண்டும். மேலும், அதன் குறிக்கோள் உறுப்பு நாடுகளின் மனித உரிமை சார்ந்த கடமைகளை நிறைவேற்றும் திறனை வலுப்படுத்துவதாக அமைய வேண்டும்.

இந்தத் தீர்மானம் இலங்கை அரசு வேறுபாடுகளைக் களைந்து, புலிகளால் பணயமாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த பல பத்தாயிரக் கணக்கான மக்களை விடுவித்ததையும், இலங்கை மக்களுக்குப் பாதுகாப்பையும், அமைதியையும் உறுதி செய்ய மேற்கொண்ட முயற்சிகளையும் வரவேற்கிறது.


இதில் இந்தியாவின் கையொப்பம் செய்யப்பட்டாகி விட்டது. தமிழக முதல்வர் எழுதிய கடிதம் எதற்காக? யாரை ஏமாற்ற? எந்த அறியாமையின் அடிப்படையில்? அல்லது எந்த அறியாமையின் மேலுள்ள நம்பிக்கையில்?

------------------------------------------------------------------------------

இது இவ்வாறிருக்க, இலங்கை அரசின் போர்க் குற்றங்களை விசாரிக்கக் கோரி, ஸ்விஸ் மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் கொண்டுவந்துள்ள தீர்மானத்தை ஜெனிவாவைச் சேர்ந்த 'யு என் வாட்ச் அமைப்பு' வலுவற்றது என்றும் ஏமாற்றமளிப்பது என்றும் விமர்சித்துள்ளது.

மேலும் கூறியவை,

இத் தீர்மானம் மிகச் சுருக்கமானது, மிக மிகத் தாமதமானது

சர்வதேச விசாரணைக்குப் பதிலாக இலஙகை அரசைத் தன்னைத்தானே விசாரித்துக் கொள்ளச் சொல்லும் இத்தீர்மானம் நகைப்புக்குரியது. ஐநாவுடனான ஒத்துழைப்புக்காகவும், இனப் பாகுபாட்டுக்கெதிரான நடவடிக்கைகளுக்காகவும் இத்தீர்மானம் பாராட்டுகிறது, உண்மையோ அதற்கு நேரெதிரானதாயிருக்க.

2006-இல் ஐரோப்பிய யூனியன் கொண்டுவந்த தீர்மானத்தைப் பின் வாங்காமல் முன்னெடுத்துச் சென்றிருந்தால், இன்று பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காக்கப்பட்டிருக்கலாம்.




நன்றி:
http://blog.unwatch.org/
http://nagarjunan.blogspot.com/

Sunday, May 24, 2009

வெட்கமும், கொதிப்பும்

இலங்கைப் படுகொலைகள் குறித்த நாகார்ஜுனன் அவர்களின் பதிவு படித்தேன். அங்கு நான் எழுதிய எனது கருத்து.

அரசுகள் இவ்வாறு வன்முறை நிகழ்த்தும் சூழலில் தீவிரவாதம் தோன்றாதிருந்தால்தான் வியப்பு. அது பயங்கரவாதமாக மாறாதிருந்தால்தான் வியப்பு. எம்மில் பலருக்கு, இயலாமையும், கோபமும் தோன்றி, அன்றாட அலுவல்களில் கரைந்து போயின. இன்னும் சிலரில் கையறுநிலை நீங்காக் கசப்பையும், வெறுப்பையும் தோற்றுவித்திருக்கிறது. என் நண்பனொருவன், இந்தியப் பொருளாதாரத்தை நசுக்குவோம் என்று கூறிக்கொண்டிருக்கிறான். சற்றே பொருளாதாரம் ஓங்கியதால்தானே, அண்டை நாடுகளின் மேலான வல்லாதிக்கத்திற்கான கனவும், ஆசையும் என்பது அவன் வாதம்.

அறிவுப்ப்புலம் என்பதான ஒன்று என்ன செய்யக்கூடும் என்று நினைக்கிறீர்கள் நீங்கள்? என் புரிதலில், இன்னுமொரு தேசத்தில் அகதிகள் என்றொரு சொல்லின் அவசியம் நேராதிருப்பதைத் தடுப்பதே அறிவுப்புலத்தின் பணியாயிருக்க முடியும். ஆயினும், அதில் சிறிதேனும் வெற்றி கிட்டுமாவென்ற ஐயம் பெரிது. நம் கண் முன்னால், இந்தியா, இலங்கை உட்பட்ட நாடுகள் வெற்றிப் பெருமிதத்துடன் செய்து முடித்துள்ள காரியங்களை எதிர்த்துக் கேள்வி கூட எழவில்லையே இங்கு. மூவாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்ட செய்தி இரண்டாம் பக்கத்தில், முதல் பக்கத்தில் கருணாநிதியும், மன்மோகன் சிங்கும் இந்தியாவின் தலையீட்டின் காரணமாக அமைதி திரும்புவது மகிழ்ச்சியளிப்பதாகத் தம்பட்டம். இன்று, அவர்களுக்கிடையில் பேச்சு வார்த்தை அமைச்சர் பதவிகளுக்காக. யார் ஆண்டாலும் இதேதான் நிலை என்பது தெளிவாகப் புரிகிறது, ஆயினும் செய்த தவறுகட்குத் தண்டனை வேண்டாம் கண்டனம் கூட இல்லை யாருக்கும். மக்களுக்கு இத்தவறுகளில் பங்குண்டா?

வீட்டுக்கு வெளியே சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுவதைக் கண்டுகொண்டிருந்தேன். சற்றே வயதில்/உருவில் வலிய சிறுவர்கள் வைத்ததுதான் சட்டம் அங்கும். கண்டு பொருமுபவர்கள் ஓரம் நின்று ஓலமிட மட்டும்தான். அல்லது, கடமையைச் செய்தோமென்ற திருப்தியில் தீவிரவாதத்திலோ, வேறெதாவது வாதத்திலோ கலந்து வெகு நிச்சயமாக ஒடுக்கப்படவேண்டியதுதான். அல்லது, கண்டு பொருமும் ஒருவரிடம், நீ வந்து புரட்சி செய்யேன் என்று கேள்வி கேட்கலாம். இன்று பாதுகாப்பாகவும், நாளை பணக்காரனாகவும் இருந்து கொள்வதற்கான வழிமுறைகளைப் பார்த்து ஒதுங்கிக்கொள்ளலாம்.

எழுதுவதைப் படித்து பொதுக்கருத்து உருவாகும் காலம் இன்னும் மிச்சமிருக்கிறதா? அறிவுரீதியில் மக்களைத் திரட்டிய புரட்சி என்ற ஒன்று சாத்தியமா? வலியை உணர்ந்த மக்களின் குரல்வளை முறிக்கப்பட்டிருக்க, மற்றவர்கள் அதில் நூற்றிலொரு பங்கேனும் உணர முடியுமா? அவரவர்க்கான எலிப் பந்தயமும், ஊடக மயக்கமும் அதற்கு வழி விடுமா?