Showing posts with label உரையாடல். Show all posts
Showing posts with label உரையாடல். Show all posts

Saturday, April 07, 2007

பார்வையாளனின் துயரம்

அந்தச் சக பயணி, தன்னை ஒரு பார்வையாளன் என்று கூறிக் கொண்டான்.
'கடைசி வரை வெறும் பார்வையாளனாகவே இருந்து விடுவதாக உத்தேசமோ?' என் கேள்விக்கு ஒற்றைச் சொல்லில் பதில் வந்த பிறகுதான், நான் அதை எதிர் பார்த்திருக்க வேண்டுமென்று நினைத்தேன்.

பார்க்கலாம்.

இப்போது என்னதான் பார்த்துக் கொண்டிருக்கிறாய்?

நான் பார்ப்பதாகப் பாசாங்கு செய்து கொண்டு தேடிக்கொண்டிருக்கின்றேனோ என்று.

என்று?

பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

அலுத்துப் போகவில்லை?

களைத்தும் போவதுண்டு.

மகிழ்ச்சியை உணர்ந்ததுண்டா?

மகிழ்ச்சியென்று காணும் வரை, உணர்ந்ததுண்டு.

துயரமொன்றும் இருக்காதே!?

உனக்குத் தெரியாது. பார்வையாளனின் துயரம். கொடிது, பெரிது, நெடிது...

ஆகா... அவரவர் துயரம்!

சரிதான். இந்தப் புன்னைகையோடு நிறுத்திக்கொள், நீ ஆசீர்வதிக்கப்பட்டவனாகவே உன் வாழ்வைத் தொடர விரும்பினால்.

உற்றுப்பார்த்தேன் அவனை.

திடீரென்று மறைந்திருந்தானென்றால், எவ்வளவு சுவாரசியமாய் இருந்திருக்கும்! அதுதான் வேண்டாம், கொஞ்சம் உணர்ச்சியையாவது முகத்தில் காட்டக் கூடாதா?

அவனோ, என்னைத் திரும்ப உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.