Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Monday, December 05, 2011

அணுக்குண்டு, நீர்க்குண்டு

அண்ணாந்து பார்த்தான்
நிலா
தலை மேல் விழுந்தால் என் செய்வேன்
அடித்துப் பதறி எழுந்தோட
அவனோடே நிலாவும்
வலப்புறம் திரும்புவது போல் நடித்து
சடாரென்று இடச்சந்தில் நுழைந்தான்
நிலாவும் கூடவே
நிலா புவியிறங்க நேரும் கொடுமைகளை
உடனுக்குடன் அறிவித்தனர்
போட்டோஷாப் வித்தகர்கள்
ஓட்டம் தடுமாறி
குப்பைத்தொட்டியில் வீழ
நிலா மறைந்து
அரையடிக் குப்பையில்
அவன் ஒளிந்து கொண்டான்.

Thursday, December 17, 2009

நீ தூங்கும் நேரத்தில்

உழைத்துக் களைத்து நீ
உறங்குகின்ற ஓரிரவில்
அருகினில் நானமர்ந்து,
அன்பின் அமைதியும், அழகும்,
என்னுள்ள நிலத்தில் விரிக்கும்
பரவச நிழல் பருகும் பறவையாயிருப்பேன்.

மலரமரும் வண்ணத்துப் பூச்சியாய்,
உன் நெற்றியில் இதழ் பதிக்கச் சொல்லும்
ஆசைக்கு அணையிட்டு,
உன் அலைக்கூந்தல் தலைவருடி
அமர்ந்திருப்பேன்,
துளியும் நீ உணராமல்.

நீயென்னும் அற்புதம்
என் வாழ்வில் நிகழ்ந்ததெண்ணி,
நெஞ்சம் நெகிழ்ந்திருப்பேன்,
கண்கள் பனித்திருப்பேன்.

பிறகு,
உறங்கும் உருவத்தின்
கண்ணாடிப் பிம்பம் போல்,
உன்னருகில் நான் கிடந்து,
நீயாக மாறுகின்ற
நினைவினில் மிதந்திருப்பேன்.

Saturday, May 17, 2008

உணர்வுக்கிழம்

முன்னோரின் அலங்காரங்கள்
அருவெறுப்பூட்டுவன
மேலிரண்டு வரிகள் போன்றே!
தன் மனதைத் தைத்து
அதனூடாய்ப் பிறந்தன தவிர்த்து
எதைத்தான் ரசிக்க இயலும்?
சென்ற நொடியிற் பிறந்தன‌
வெட்கமூட்டுவன தவிர்க்கவியலாது.
அறியப்படுமுன் வெறுக்கப்படுதலே
பிறப்பனவற்றின் ஒரே விதி போலும்.
தன்சந்ததி உண்டு வாழும்
என் உணர்வுக்கிழம் எதுவோ, யாரோ?

Tuesday, November 06, 2007

இந்த முறையும்

சாலையோரக் கற்சுவரில்
பாசி பூத்திருக்கும் மழைக்காலம்.
நம்மில் உற்சாகம் போல
காற்றில் ஈரம் அடர்ந்திருந்தது.
நாம் நடந்து கடந்தோம்
தோப்புகளையும், வயல்களையும்,
வண்ணத்துப் பூச்சிகள் போல.
மரியாதை கருதியல்ல
மகிழ்வால் புன்னகைத்தோம்
அது நமது மொழியாயிருந்தது.
உன் அருகாமையோ
இதயத் துடிப்பை ஒன்றும் செய்யாத
இயல்பாயிருந்தது.
உயர எறிந்த இலவம்பூ
சுழன்று விழும் அழகு கண்டு
அதிசயித்துக் குதூகலித்தாய் நீ.
கனவுதான் என்றாலும்
உன்முகப் பரவசம் காண
செய்ய இயலாததொன்றுண்டோ
தேடிச் சலித்தேன் நான்.

Saturday, April 07, 2007

விமான நிலையத்தில் நுழைந்தபோது...

ஆசையுடன் வளர்த்த தாடி
திடீரென்று அந்நியமாயிற்று.
உலகின் சந்தோஷத்தில்
பங்கு பெற மறுக்கும் என் பிடிவாதம்
எனக்கே குமட்டிற்று.
'உப்பு கொஞ்சம் தூக்கல்'
ஒப்புக்குக் குறைசொல்லும்
நாத்தனார் குரலாய்,
என் முகத்தில்
இன்னும் அப்பியிருக்கிறது
முப்பது நாள் தாடி.

Tuesday, February 13, 2007

காதலிலே என்ன ஆச்சு?

( ம்ம்.. என்னென்னமோ ஆச்சு... :)


நேற்றுவரை வைத்திருந்த கொள்கையெல்லாம் துச்சமாச்சு - உன்
வேல்விழியில் விழுவதுவே பிறந்தபயன் என்றாச்சு!
நீநடந்த பாதையெல்லாம் என்பள்ளிக் கூடமாச்சு - என்
நாநடக்கும் ஒருபாதை உன்பேர்தான் என்றாச்சு!
நண்பர்கள் கூட்டத்தை நான் மறந்து நாளாச்சு - என்
அன்பும் ஆசையும் உனைக்கண்டு ஆளாச்சு!

அதிகாலை எழுப்புகிற மணிஉந்தன் நினைவாச்சு - தினம்
எனைத்தூங்க வைக்கின்ற தாலாட்டும் அதுவாச்சு!
நாள்முழுதும் உன்நினைவே நெஞ்சுக்குள் ஓடலாச்சு - நான்
தூங்குகின்ற சிலபொழுதும் உன்கனவில் நிறைஞ்சாச்சு!
காண்பதெல்லாம் உன்நினைவைத் தூண்டுகின்ற தோதாச்சு - உனைக்
காணாத நாளெல்லாம் பூவிழந்த நாராச்சு!

எதிர்காலம் என்னவென்ற குழப்பமது தீர்ந்தாச்சு - நாம்
மகிழ்வோடு வாழ்வதுதான் வாழ்வென்று ஓர்ந்தாச்சு!
காவிகட்ட நினைச்சிருந்த காலமெல்லாம் போயாச்சு - என்
ஆவியுடன் அத்தனையும் உனக்கென்று ஆயாச்சு!
என்வழி எனக்கென்ற அகங்காரம் தீர்ந்தாச்சு - இனி
உன்வழியில் துணையாக வருவதென்று தீர்வாச்சு!

ஊருலகம் உற்றார்கள் சொல்வதெல்லாம் தூசாச்சு - உன்
பார்வையிடும் பணியொன்றே என்வாழ்வில் பெரிதாச்சு!
உனதாசை நிறைவேற்ற உண்டானது நானாச்சு - இனி
எனக்கான தென்றிங்கு ஓருயிரும் நீயாச்சு!
பழங்காலம் சொல்லிவைத்த சாதிமதப் பொய்ப்பூச்சு - அதைப்
பொய்யாக்கி ஒன்றாக ஒலிக்கட்டும் நம்மூச்சு!

காதல் - ஒரு தலைப்பில் பல கவிதை

(காதலர் தினத்தை முன்னிட்டு...)

*********************

தயங்கி நகரும்
நத்தையின் மேல்
இல்லையென்ற ஒற்றைச் சொல்லாய்
வண்டிச் சக்கரம்
ஏறி நசுக்கிற்று.

எத்தனை முறை
வெளியேற்றினாலும்
குட்டிகளை மீண்டும்
ஒளித்துக் கொணர்ந்து
குடியுரிமை கேட்டுக் கொண்டுதானிருக்கிறது,
வீட்டுப் பூனை.

தவறில்லை
தாய்ப்பாசம்
மட்டும்தானா?


*********************

மறக்கச் சொல்கிறார்கள்!
மறக்கத்தான் வேண்டும்
இயன்றால்,
இறக்கும்போதேனும்!

*********************

நிலை மறந்து செயல் மறந்து நிலவுக்கும் போய் வரலாம்
கலையுடனே காவியங்கள் செழிப்புற்றே வளர்ந்திடலாம்
துணையொன்றின் துயர் தீர்க்க உயிர் தரவும் தூண்டிடலாம்
காதலினால் காலமெலாம் மகிழ்வுற்றே நீண்டிடலாம்!

பதில் வராத கடிதங்கள் பைத்தியமாய் ஆக்கிடலாம்
பதின்வயதுக் குழப்பங்கள் நிலைதழும்பாய் மாறிடலாம்
கழிவிரக்கப் புலம்பல்கள் கவிதையென்று பேர்பெறலாம்
காதலினால் பலவிதைகள் பாறையிலும் காய்ந்திடலாம்!

*********************

Thursday, February 01, 2007

சொற்சிலுவைகள்

சொற்களும்
நம்மைப் போன்றவையே!

கட்டாயம் ஒரு நாளில்,
நான் ஏன் பிறந்தேன்,
என்னால் ஆவதென்ன - என்று
அவற்றிற்கும் தோன்றத்தான் செய்கிறது.

பிறப்பித்தவன்
என்ற சுமையோடு,
அவற்றின் சிலுவைகளும்
எனக்கு.

சொற்களும்
சிலுவை போன்றவையே!
நான் அறையப்படுகிறேன்,
என் சொற்களில்,
என் சொல்லில்.

Sunday, July 09, 2006

கருத்து மோதல்

தொடங்கிற்று விவாதம்
விரைவிலேயே
சூடு பிடித்தது.
நாட்கணக்கில் கூர்படுத்திய
ஆயுதங்கள் மோதிக்கொண்டன.
கருத்து மோதல்.

முடிந்து திரும்புகையில்,
உடனிருந்தவை
எதிரியின் மேல் உரசி
இன்னும் கூர்செய்து கொண்ட
ஆயுதங்கள்.
எதிரி முகாமில்
கண்டெடுத்த
புதிய நவீன ஆயுதங்கள்
அதே
பழைய கருத்துக்கள்.

Monday, June 19, 2006

பசுக்கொலை செய்யுங்கள் (அ) பாதுகாப்பற்ற நிம்மதி

தொடரும் அறிதலில்
செத்து மடிகின்றன
நான் வழிபட்டவை
வணங்கியவை
ரசித்தவை
என எத்தனையோ
புனிதப் பசுக்கள்.

இன்னும் வியப்பு,
நானும் சில
வளர்த்திருக்கிறேன்
நான் சிலவாக
வளர்ந்திருக்கிறேன்.
கொல்லுங்கள் எல்லாவற்றையும்.

எல்லாமே எனக்குப் பால் தந்தன.
ஆயினும்
நன்றி மறக்கும் வேளையிது.

பசுவற்ற பாழ்வெளியில்,
பாதுகாப்பு இல்லையென்றாலும்,
நிம்மதி இருக்கும்.

Tuesday, April 11, 2006

என் சவக்கிடங்கில் ஒரு புதிய வருகை

மனதின் ஏதோ ஓர் மூலையினின்றும்
தலை காட்டிற்று அது.

தாவிப் பிடித்துத்
துவக்கு விசாரணையை.
ஏன், எதற்கு, எப்படி,
யார், எங்கு, எப்போது,
இன்ன பல கேள்விகள்.
தத்துவப் படுக்கையில் தள்ளி
அறுத்தும் ஆராய்ந்து விடு.

எப்படியும் வர வேண்டும்,
ஒரு முடிவு, வந்தே விட்டது.
இனி அலங்காரம்தான்.
புதிதான, புதிரான சொற்கள்,
சொல்லடுக்குகள் கொண்டு.
எதுகை மோனை வேண்டாம்,
அது பழைய காலம்.
கூர்மையாக்கு, இறுக்கமாக்கு
மூச்சுத் திணறாது;
அறுத்தபோதே இறந்தாயிற்று.

ஆயிற்றா,
அப்படியே தள்ளி வந்து,
சவக்கிடங்கில் அழகாக நிறுத்து.

காத்திருக்கிறார்கள் பார்வையாளர்கள்.
ரசிக்கவும், ருசிக்கவும்,
பாராட்டவும், பரிசளிக்கவும்,
இன்னும் ஆராய்ந்து,
அதைக் கொண்டு
தத்தம் சவக்கிடங்கை அலங்கரிக்கவும்.

Wednesday, April 05, 2006

ஒரு காயலான் கடையைப் பற்றி...

அது ஒரு காயலான் கடை.
ஆம், வெறும் காயலான் கடை.
ஓடும் பேருந்திலிருந்து பார்க்கப்பட்டது;
நாறும் புகையிலைச் சாற்றுக்காகக் காத்திருந்த
கண்ணாடி ஜன்னல் வழியே;
பார்த்தவன்,
இருபத்தாறு வயதான
கண்களைச் சுமந்துகொண்டு,
வீடு நோக்கிச் சென்றுகொண்டிருந்தான்;
சொல்லாத, மறுக்கப்பட்ட
காதலின் மிச்சத்தைச்
சுமந்து கொண்டும், இழந்து கொண்டும்;
தான் உடைந்ததெனக் கருதிய
இதயத்தின் துண்டுகளைக்
கவனமாக இறுக்கிப் பிடித்து;
கடந்த காலத்தினின்றும்
பிரித்தறியவியலாத,
புதியதோர் எதிர்காலத்தை நோக்கி.
அது ஒரு காயலான் கடை.

Tuesday, March 14, 2006

நானும் நானோ?

பாழ் எழுதிய 'நீயாகிய நீ' கவிதையால் தூண்டப்பட்டு...

என்னைத் தொழுகிறேன்தான்.
அதன் முன்,
முன்னிற்கும் என்னில்,
நானாகிய என்னால்
செய்யவும்,
அறியவும் இயலாதன,
நான்
செய்யவும்,
அறியவும் விரும்புவன,
கண்டும், கேட்டும்,
அறிந்தும், அறியாமலும் அஞ்சுவன
அனைத்தையும் ஏற்றுவது கண்டிலையோ?
இனி,
நானும் நானோ?
என் முன்னிற்பதுவும் நானோ?

Thursday, March 02, 2006

எச்சரிக்கை



கடவுள், கருணை
என்று சொல்லிக்கொண்டு
யாரும் என்னிடம் வந்துவிட வேண்டாம்.

நான்
உங்கள் முகத்தில்
உமிழக் கூடும்.
அல்லது
என் கூர்நகங் கொண்டு
முகத்தைக் கிழிக்கக் கூடும்.

என்
அறியாமை கண்டு சிரிக்கவோ,
அல்லது
எனக்கு ஞானம் வர வேண்டி அழவோ,
உங்கள் மதம்சொல்லிக் கொடுத்திருக்கலாம்.
என்ன இழவானாலும்,
என் காதில் விழாதபடிச் செய்யுங்கள்.
அது நல்லது,
உங்களுக்கு.

Thursday, February 23, 2006

மறப்போம்

ஒவ்வொரு நொடியும்
என் வாழ்க்கை முன்னின்று கேட்கும்
என்ன செய்யப் போகிறாய்? - என்று.

இன்னும் கூறும்.

இதுவரை செய்ததெதுவும்
அதற்குப் பொருட்டில்லையாம்.
எதிர்காலம் தருவதென்னவென்ற
பயமும் தேவையில்லையாம்.

பெற்றோரும் மற்றோரும்
உற்றோரும் அற்றோரும்
குறித்துக் கவலை வீணாம்.

பிறந்த இடம், கற்ற மொழி,
செய்த தொழில்,
இன்ன பிற அடையாளங்கள்
கூட்டி வரும் கூட்டம்
இவையொன்றும் புனிதமில்லையாம்.

இந்த நொடி இன்பம்
தருவதெல்லாம் தெய்வமாம்.
அடுத்த நொடி அதற்கும்
அர்த்தமொன்றும் இல்லையாம்.

ஊர் கூடிச் சொல்லி நிற்கும்
ஆயிரமாயிரம் விடயங்கள்
நல்லதென்றும், தீயதென்றும்,
திட்டமென்றும், கொள்கையென்றும்,
ஒன்றென்றும், வேறென்றும்,
உறவென்றும், பகையென்றும்,
நினையென்றும், மறவென்றும்.
அத்தனையும்
ஆனையிட்ட சாணியன்றி
வேறொரு பயனில்லையாம்.

அணைக்க நீண்ட
கரங்களை
அணைத்து மறப்போம்.
தீர்ப்பொன்றும் சொல்லோம்.

அன்பு சிந்திய
விழிகளை
அன்புக்கடல் கொண்டு நிறைத்து
அதையும் மறப்போம்.

ஆயுதம் கொண்டு வரும்
கரம் கண்டால்,
இயன்றால்,
அடித்து ஒடுக்குவோம்.
பயந்தால்,
பதறிப் புடைத்து ஓடுவோம்.

ஆயினும்,
அனைத்தையும் மறப்போம்,
அடுத்த நொடி.

Wednesday, February 22, 2006

பாராட்டு

அடுத்தவர் பாராட்டுக்காக
ஏங்கும் பழக்கம்
எப்போது தோன்றியது என்னில்?

வெளியில் சொல்வது வேறானாலும்,
ஒவ்வோர் அசைவும்
மற்றவர் ஆமோதிப்பை,
வியப்பை, ரசிப்பை
பாராட்டுக்களை
நோக்கி எய்யும் அம்பானது எப்போது?

அதுவும் போக,
எப்போதிருந்து அல்லது ஏன்
இந்த அம்புறாத்தூளி எனக்கு
அலுக்கத் தொடங்கிற்று?

அதன் இல்லாமை கண்டு
யாரேனும் என்னைப்
புகழ்தல் கூடும்
என்று உணர்ந்த கணமாயிருக்குமோ?

அது கிடக்கட்டும்!
ஏன் இந்தக் கவிதை இங்கே?
நீ உணர்ந்ததென்றால்,
அதை எழுதி வைக்க வேண்டிய
அவசியமென்ன?

உன்
ஆராய்ச்சி கண்டேனும்
யாராவது வியக்க வேண்டுமென்றா?

நக்கீரா!
குற்றம் கண்டுபிடித்தது போதும்.
நான் தப்புகிறேன்,
என் மௌனத்துள்.
.

Saturday, February 18, 2006

போதும் பயணம்

இன்னுமொரு வைக்கோல்
என் வண்டியில் ஏற்றுங்கள்.
எதற்காகவென்று தெரியாத சுமையுடன்
எங்கென்றும் என்னவென்றும் தெரியாத இலக்கு நோக்கி
ஏனென்று தெரியாமல் அலைந்து திரிவதை விட
அச்சு முறிந்து
சற்றே
இளைப்பாறுகிறேன்.