Thursday, December 17, 2009

நீ தூங்கும் நேரத்தில்

உழைத்துக் களைத்து நீ
உறங்குகின்ற ஓரிரவில்
அருகினில் நானமர்ந்து,
அன்பின் அமைதியும், அழகும்,
என்னுள்ள நிலத்தில் விரிக்கும்
பரவச நிழல் பருகும் பறவையாயிருப்பேன்.

மலரமரும் வண்ணத்துப் பூச்சியாய்,
உன் நெற்றியில் இதழ் பதிக்கச் சொல்லும்
ஆசைக்கு அணையிட்டு,
உன் அலைக்கூந்தல் தலைவருடி
அமர்ந்திருப்பேன்,
துளியும் நீ உணராமல்.

நீயென்னும் அற்புதம்
என் வாழ்வில் நிகழ்ந்ததெண்ணி,
நெஞ்சம் நெகிழ்ந்திருப்பேன்,
கண்கள் பனித்திருப்பேன்.

பிறகு,
உறங்கும் உருவத்தின்
கண்ணாடிப் பிம்பம் போல்,
உன்னருகில் நான் கிடந்து,
நீயாக மாறுகின்ற
நினைவினில் மிதந்திருப்பேன்.