Sunday, July 09, 2006

கருத்து மோதல்

தொடங்கிற்று விவாதம்
விரைவிலேயே
சூடு பிடித்தது.
நாட்கணக்கில் கூர்படுத்திய
ஆயுதங்கள் மோதிக்கொண்டன.
கருத்து மோதல்.

முடிந்து திரும்புகையில்,
உடனிருந்தவை
எதிரியின் மேல் உரசி
இன்னும் கூர்செய்து கொண்ட
ஆயுதங்கள்.
எதிரி முகாமில்
கண்டெடுத்த
புதிய நவீன ஆயுதங்கள்
அதே
பழைய கருத்துக்கள்.

Tuesday, June 27, 2006

கடலில் சேர்ந்த ஆறு

நண்பர் ராசா என்னையும் ஒரு ஆறு பதிவு போடச் சொல்லியிருக்கார்.

என்ன எழுதறதுன்னு யோசிச்சா ஒண்ணுமே தோண மாட்டேங்குது. முதலாவது பேச்சுத் தமிழ்ல எழுதிப் பழக்கமில்ல. அப்புறம், சும்மா ஜாலிக்காக எழுதினதுமில்ல இது வரைக்கும். இப்பக் கூட, பிடிச்ச பாட்டு, படம்னு எழுத மனசு வரல. மயூரன் சொன்ன மாதிரி, இந்த மாதிரிப் பதிவுகள்ல சுய முன்னிறுத்தல் இருக்கறதுக்கான வாய்ப்புகளும் இருக்கு. அதாவது என்ன சொன்னா நம்மளைப் பத்தி நல்ல அபிப்பிராயம் உண்டாகும்னு தெரிஞ்சு அத எழுதறது. இப்பக் கூட, நான் பண்ணின தப்புகளைப் பத்தி எழுதினாக் கூட, அதுக்கும் பின்னாடி எனக்கு இருக்கிற உள்நோக்கம் எனக்குத் தெளிவாத் தெரியும். என்ன பண்றதுங்க, இப்படியே பழகிப் போச்சு. இதில இருந்து தப்பிச்சு எழுதலாம்தான் பொதுவா. ஆனா என்னைப் பத்தி, என்னோட குழப்பங்களைப் பத்தி, என்னோட பிரச்சினைகளைப் பத்தி மட்டுமே எழுதத் தோணுது. அவ்வளவு சுயநலம்.

இதோ, இப்ப நான் எட்டு வயசுல பண்ண ஒரு காரியம் பத்தி எழுத ஆரம்பிச்சேன். இதை ஊருக்கே சொல்லணுமா-னு ஒரு கேள்வி மனசுல. அவ்வளவுதான், அதை அழிச்சுட்டேன். இப்போ என்னதான் எழுத?

அதனால, நான் பண்ணியிருக்க வேண்டாம் அல்லது பண்ணியிருக்கணும்னு இப்போ நினைக்கிற, ஊருக்கே தெரிஞ்சாலும் தப்பில்லன்னு நான் நினைக்கிற ஆறு விஷயங்களை மட்டும் சொல்லப் போறேன். அடைப்புக்குறிக்குள்ள இருக்கறது என்னோட மனசாட்சி.

1. பத்தாவது படிக்கும்போது, பள்ளிக்கூடத்த விட்டு வேற பள்ளிக்கு மாறிப் போற ஒரு முன்னாள் நண்பன், வெளியே இருந்து நண்பர்களை அனுப்பிக் கூப்பிட்டப்போ, வீறாப்பா மாட்டேன்னு சொல்லாம இருந்திருக்கணும். ஒரு வருஷம் கழிச்சு அப்பா கூட வண்டியில உக்காந்து போறப்போ, அதே மாதிரி அவனும் அவங்கப்பா கூட வந்தான். ஒரு நொடி திரும்பிப் பாக்கத்தான் நேரம் இருந்துச்சு. அவனும் பாத்த மாதிரி இருந்தது. அவனுக்கும் அப்படித்தான் இருந்துருக்கும். (அப்போ, பெரிய கோவக்காரன், ஆனாலும் பின்னாடி வருத்தப்படற நல்ல மனசுக்காரன். அப்படித்தானே?)

2. பன்னிரெண்டாவதுல, தமிழ் செய்யுள் வகுப்பு நான் எடுத்தப்போ, வேதியியல் வாத்தியார் மேல இருக்கிற கோவத்துல, பெண்களைப் புகழ்ந்து இருந்த ஒரு கவிதை/செய்யுளைக் குதறி எடுத்து, மொத்தமா பெண்களைப் பத்தித் தப்பா சொல்லாம இருந்திருக்கணும். குறைஞ்சபட்சம், அதைப் பத்தி ஒரு பொண்ணு அடுத்த நாள் கேட்டப்போ, உள்மனசு சொன்ன மாதிரி அது தப்புனு ஒத்துக்கிட்டிருந்திருக்கணும். (ஓஹோ, வகுப்புல பாடம் எடுத்தீங்களோ? வாத்தியாரையே பகைச்சுக்கிட்டீங்களோ?)

3. அதே வருஷம், திருப்புத் தேர்வு எழுதும்போது வந்த பொருளாதாரப் பிரிவுக்குப் பாடம் எடுக்கிற டீச்சர், அரையாண்டுல எத்தனை பாடத்துல நூத்துக்கு நூறுனு ஆசையாவும், அக்கறையாவும் கேட்டபோதாவது, பதில் சொல்ல முடியாத உண்மை உறைச்சு கொஞ்சம் ஒழுங்காப் படிச்சிருக்கணும். ('நான் நல்லாப் படிச்சவன்தான், வயசுக் கோளாறு' அப்படின்னு சொன்னா ஒரு ஹீரோதான?)

4. என்னோட மாமா எனக்கு நியூமராலஜி பாத்து, பேரோட ஸ்பெல்லிங்கையும், கையெழுத்தையும் மாத்தச் சொன்னப்போ தைரியமா, எனக்கு நம்பிக்கை இல்லனு சொல்லியிருக்கணும். இப்போ அவங்களுக்கு எழுதுற மெயில்-ல மட்டும் அந்த ஸ்பெல்லிங் பயன்படுத்துற போலித்தனத்துல இருந்து தப்பிச்சிருக்கலாம். (பகுத்தறிவு?)

5. மனசுக்குப் பிடிச்ச பொண்ணு உக்காந்து பாத்துட்டிருக்கிற உற்சாகத்துல, உயரமான மரங்களுக்கு இடையில கட்டி வச்ச வலையில (இந்த வயசுல) குட்டிக் கரணம் போட்டுக் காட்டாம இருந்திருக்கணும். இப்போ எல்லாம் முடிஞ்சப்புறம், நினைச்சா என் மேலயே வர்ற கோவத்துல இருந்தாவது தப்பிச்சிருக்கலாம். ம்ம்ம்ம்.... ஒரு விதத்துல இது சிரிப்பாதான் இருக்கு. அவ்வளவு மோசமில்லை. (ஓஹோ! மூன்றாம் பிறை கமல்னு நினைப்பா?)

6. எத்தனையோ நண்பர்கள், தெரிஞ்சவங்க, சொந்தக்காரங்க எல்லார்கிட்டயும் கட்டாயம் கடிதம் போடறேன், ·போன் பண்ணறேன்னு சொல்லாம இருக்கலாம். குற்ற உணர்ச்சியாவது இல்லாம இருக்கும்.

இப்போ யோசிச்சு என்ன பண்ண? ஒண்ணும் பண்ணமுடியாது. அதாவது, ஆத்துத் தண்ணியைக் கடலுக்குப் போனப்புறம் குடிக்க முடியாது. காலம் கடந்து போச்சு. பெருமூச்சை விட்டுட்டு, இந்தப் பதிவையும் முடிப்போம்.

சரி, நான் ஒரு ஆறு பேரைக் கூப்பிடணுமாமில்ல! நான் அதைச் செய்யப் போறதில்ல. ஏன்னா, இந்த ஆறும் கடல்ல சேந்தாச்சு! (நம்ம பேருக்கு அர்த்தம் தெரியும்ல?)

Monday, June 19, 2006

பசுக்கொலை செய்யுங்கள் (அ) பாதுகாப்பற்ற நிம்மதி

தொடரும் அறிதலில்
செத்து மடிகின்றன
நான் வழிபட்டவை
வணங்கியவை
ரசித்தவை
என எத்தனையோ
புனிதப் பசுக்கள்.

இன்னும் வியப்பு,
நானும் சில
வளர்த்திருக்கிறேன்
நான் சிலவாக
வளர்ந்திருக்கிறேன்.
கொல்லுங்கள் எல்லாவற்றையும்.

எல்லாமே எனக்குப் பால் தந்தன.
ஆயினும்
நன்றி மறக்கும் வேளையிது.

பசுவற்ற பாழ்வெளியில்,
பாதுகாப்பு இல்லையென்றாலும்,
நிம்மதி இருக்கும்.

Saturday, June 10, 2006

பிரார்த்தனை

சூலமங்கலம் ராஜலக்ஷ்மி பாடிய பாரதியின் 'காக்கைச் சிறகினிலே நந்தலாலா' பாட்டைக் கேட்டுக்கொண்டிருந்தேன். ஏனோ கண்ணில் கண்ணீர் பெருகிற்று. தேடினாலும் காரணம் கிடைக்கப் போவதில்லை. இந்த ஒலியலைகள் உள்ளே சென்று என்ன செய்கின்றனவென்று என்றுதான் அறிந்தேன்? காண்பதெல்லாம், ஏதோ அமைதி அல்லது நெகிழ்வு. ஏன்? தெரியாது. பக்தி? கேள்விகள் கேட்டு அதையும்தான் துரத்தியாயிற்றே. பக்தியுடன் எதையாவது பாடி அல்லது கேட்டு நீண்ட நாட்களாகி விட்டன. பிரார்த்தனை செய்தோ, இன்னுமதிகம் காலம்.

பிரார்த்தனை! ஒரு நண்பிக்காகப் பிரார்த்தனை செய்வதாக வாக்குக் கொடுத்திருக்கிறேன். காதல் பிரச்சினைதான். பிரார்த்தனை செய்கிறேனென்று சொன்னால் என்ன பொருள்? என்னால் வேறு ஒன்றும் செய்ய இயலாது என்று பொருள். அது தெரிந்துதான் தனக்காகப் பிரார்த்தனை செய்யக் கேட்டிருப்பாள். பிச்சைக்காரனிடம் பொன் குடமா கேட்பார்கள்? அவளுக்குத் தெரியாது, இந்தப் பிச்சைக்காரனிடம் திருவோடு கூட இல்லையென்று.

எத்தனை துயரங்கள்? எத்தனை பிரச்சினைகள்? வெவ்வேறு மதம். ஊர் என்ன சொல்லும்? அவன் என்ன சொல்வான்? இவன் என்ன சொல்வான்? அம்மா வருந்துவாரே! அப்பா வருந்துவாரே! குடும்ப கௌரவம் என்னாவது? மதம் மாற முடியாது, சுயமே அனுமதிக்காது அதை.

இதோ பிரார்த்திக்கிறேன். உனக்காக. தடை தாண்டி வெல்லும் திறன் உனக்குண்டு பெண்ணே! மகிழ்வுற்றிரு! இறையொன்றிருந்தாலும் இல்லையென்றாலும், அது கருணை வடிவமென்பது உண்மையென்றாலும், அல்லது ஒன்றையொன்று உண்டு வாழும் உயிர் படைத்துக் கண்டு களிப்புற்று வாழும் சக்தியென்றாலும், உன் வாழ்வு சிறப்புற வேண்டுகிறேன்!

உள்ளத் தெளிவோடிரு; உன் அன்பை நம்பு. அது உன்னைக் கரைசேர்க்கும். அது மட்டுமே!

Wednesday, May 24, 2006

ஒரு சுய-மறு-பரிசீலனை

வலைப்பதிவர் பெயர்: தன. வித்யாசாகரன்

வலைப்பூ பெயர் : தெளிவு, chumma

சுட்டி(url) :
http://vidyasa.blogspot.com
http://vidyasakaran.blogspot.com
(எத்தனை வலைப்பூக்கள் இருந்தாலும் அனைத்தையும் ஒரே பதிவில் அளிக்கலாம்)

ஊர்: திருநெல்வேலி, பொள்ளாச்சி, பெங்களூர் (சொந்த ஊர், வளர்ந்த ஊர், வசிக்கும் ஊர்)

நாடு: இந்தியா

வலைப்பூ அறிமுகம் செய்தவர்: வலையில் கண்டுகொண்டதுதான். மாலன் அவர்களது கட்டுரையொன்றின் வழி.

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : மார்ச் 2004 (இதன் முன் rediff-இல் ஒரு வலைப்பூ ஆரம்பித்து, தொடராமல் விட்டு விட்டேன்)

இது எத்தனையாவது பதிவு: அதிகமில்லை, 22

இப்பதிவின் சுட்டி(url): http://vidyasa.blogspot.com/2006/05/blog-post.html
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்:
தமிழ்: சிந்தனையை ஒழுங்காகப் பதிவு செய்து, என் கேள்விகட்கு விடையறிய உதவுமென்ற எண்ணம். இப்போது கிறுக்கல் தளமாகி விட்டது. பரவாயில்லை.
ஆங்கிலம்: என் உணர்வுகளைச் சிலருடன் பகிர்ந்து கொள்ள

சந்தித்த அனுபவங்கள்: அதிகமில்லை.

பெற்ற நண்பர்கள்: மிகக் குறைவு. என் நோக்கமும் அதுவல்ல

கற்றவை: வாசித்தவை நிறைய உண்டு. கற்றவை மிகக் குறைவு. பிறரது எண்ண்ங்களைப் பற்றிய, பல்வேறு புதிய விதயங்களைப் பற்றிய பொதுவான புரிதல் வளர்ந்திருக்கிறது.

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: பெரிய வித்யாசமில்லை. தாளில் எழுதாமல் தளத்தில் பதிகிறேன். என் சுதந்திரம் என்னிடம், எப்போதும்போல் பத்திரம்.

இனி செய்ய நினைப்பவை: தொடர்ந்து குழம்பித் தெளிந்து, குழம்பித் தொடர்தல்

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: என் profile-இல் உள்ளது தவிர வேறொன்றுமில்லை.

இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்: நன்றி! ஒரு சுய பரிசீலனைக்கு உதவியமைக்கு. :-)

Tuesday, April 11, 2006

என் சவக்கிடங்கில் ஒரு புதிய வருகை

மனதின் ஏதோ ஓர் மூலையினின்றும்
தலை காட்டிற்று அது.

தாவிப் பிடித்துத்
துவக்கு விசாரணையை.
ஏன், எதற்கு, எப்படி,
யார், எங்கு, எப்போது,
இன்ன பல கேள்விகள்.
தத்துவப் படுக்கையில் தள்ளி
அறுத்தும் ஆராய்ந்து விடு.

எப்படியும் வர வேண்டும்,
ஒரு முடிவு, வந்தே விட்டது.
இனி அலங்காரம்தான்.
புதிதான, புதிரான சொற்கள்,
சொல்லடுக்குகள் கொண்டு.
எதுகை மோனை வேண்டாம்,
அது பழைய காலம்.
கூர்மையாக்கு, இறுக்கமாக்கு
மூச்சுத் திணறாது;
அறுத்தபோதே இறந்தாயிற்று.

ஆயிற்றா,
அப்படியே தள்ளி வந்து,
சவக்கிடங்கில் அழகாக நிறுத்து.

காத்திருக்கிறார்கள் பார்வையாளர்கள்.
ரசிக்கவும், ருசிக்கவும்,
பாராட்டவும், பரிசளிக்கவும்,
இன்னும் ஆராய்ந்து,
அதைக் கொண்டு
தத்தம் சவக்கிடங்கை அலங்கரிக்கவும்.

என் இன்பம் எதில்?

நண்பர் பாழ் எழுதிய கவிதை 'தேடாதே, தொலைந்து போவாய்' -இன் தூண்டுதலில் எழுதியது...


பாழ்,

நான் நினைப்பது...தேடல் இல்லாமல் இருக்க முடியுமா என்ன? வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேட வேண்டாம் என்றுதான் நீங்களும் சொல்கிறீர்கள். மற்றபடி எப்போதும் எல்லோரும் ஏதாவது ஒன்றைத் தேடிக் கொண்டுதான் இருக்கிறோம், இல்லையா? ஒரே வார்த்தையில் சொல்வதென்றால், நாம் எல்லோரும் தேடுவது இன்பம் என்று சொல்லலாமா? இந்த இன்பம் எதில் என்பதில்தான் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் வேறுபடுகிறோம். இன்னொருவருடன் மட்டுமல்ல, நமக்குள்ளேயே, ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு பொருள் நமக்கு இன்பம் அளிப்பதாகத் தோன்றுகிறது. அதுவும் போக, நாம் நாடுவது இன்பம் ஆனாலும், துன்பம் வராமற் போவதுமில்லை. இதுதான் நம்மைத் துன்பம் இல்லாத நிலைத்த இன்பம் எது என்று தேடத் தூண்டுகிறது. இந்தத் தேடல், முடிவாக வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேடுவதில் முடிகிறது.

இன்னொரு வகையில் பார்த்தால், நம் முன் இருக்கக் கூடிய சாத்தியக்கூறுகள்தான் எத்தனை எத்தனை? அடுத்த நொடியில், நான் செய்யத் தகுந்ததாக இருக்கும் காரியங்கள் எத்தனை ஆயிரம்? அதில் எதைச் செய்வது என்ற கேள்வி வரும்போது, நான் எதைத் தேர்ந்தெடுப்பது? குறிக்கோள் ஒன்று வைத்துக்கொண்டு செயல்படுங்கள் என்று சொல்வார்கள். என் பிரச்சினை, நான் அதிலும் ஆயிரம் கேள்விகள் கேட்கிறேன். கடைசியில் வரும் கேள்வி இதுதான், வாழ்க்கையின் அர்த்தம் என்ன?

ஆக, பேராசைதான் பிரச்சினை என்று தோன்றுகிறது. 'கேட்பினும் பெரிது கேள்' என்று சொன்னார்கள். எது பெரிது என்று அறிவதில் வாழ்க்கையைத் தொலைக்கிறோம். இதை விட்டு விட்டு, வேறு ஏதாவதைத் தேடேன் என்றால், பொருள், பதவி, மானுட நன்மை, ஒற்றுமை என்று எதையாவது தேடலாம்தான். இத்தனை காலமாக மனிதர்கள் இவை எல்லாவற்றையும் தேடியதில் என்ன நிகழ்ந்திருக்கிறது? எப்படிப்பட்ட உலகை அடுத்த சந்ததிக்கு விட்டுச் செல்கிறோம் என்று அக்கறை சார்ந்த கேள்வி வருகிறது. இதுவும் வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேடத் தூண்டுகிறது.

கீதை சொல்கிறது. 'பயனை எதிர்பாராதே, கடமையைச் செய்' என்று. ஒரு வேளை, அது சொல்வது, எதையோ தேடாதே, இந்த நொடியில் செய்ய வேண்டியதைச் செய் என்றா? என்றாலும், என் கடமை என்னவென்பதை யார் முடிவு செய்வது? நிச்சயமாக என் தந்தையின் கடமை அல்ல. என் கடமையைத் தேடும்போதும் நான் முட்டி நிற்பது நம் கேள்வியில்தான்.
மீண்டும், இன்பம் குறித்துப் பேசினால், 'என் இன்பம் பணக்காரனாவதில் இருக்கிறது, எனவே நான் அதைத் தேடுகிறேன்', 'என் இன்பம் அதிகாரம் சம்பாதிப்பதில் இருக்கிறது, எனவே நான் அதைத் தேடுகிறேன்' என்றெல்லாம் யார் சொன்னாலும் அதில் தவறு இல்லைதானே. (மற்றவர்களைத் துன்புறுத்தாமல், என்று ஓர் இணைப்பு சேர்க்கச் சொல்லாதீர்கள், மீண்டும் அது நமது கேள்வி நோக்கித் தள்ளி விடும்). இங்கு நான் சொல்வது, 'என் இன்பம் எதில் இருக்கிறது என்று தெரியவில்லை, எனவேதான் எதில் இன்பம் என்று தேடுகிறேன்' என்று.

இப்போது என்னிடம் இரண்டு விஷயங்கள் இந்தத் தேடலைத் தூண்டுவதாக இருக்கின்றன. ஒன்று இன்பம், மற்றது நான் என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவின்மை. இரண்டும் அடிப்படையில் ஒன்றுதான். நான் என்னதான் எனக்கென்று ஒரு செயலை வகுத்துக் கொண்டாலும், அதன் காரணம் என் இன்பம் அதில் இருப்பதுதான். ஆக, நாம் தேடுவது இன்பம் என்பதுதான்.

இப்போது ஓர் அதிர்ச்சியான எண்ணம் வருகிறது. நான் ஏன் எதிலும் இன்பம் காணாமல், தேடிக் கொண்டே இருக்கிறேன்? என்னுடைய எதிர்மறைச் சிந்தனை காரணமா? தாழ்வு மனப்பான்மையா? மற்றவர்களது வெற்றியை ஒப்புக் கொள்ள இயலாமல், 'நான் கண்டுபிடிக்கிறேன் பார் இதிலும் பெரிது' என்று எண்ணும் அசூயையா?

அல்லது, எதையாவது தேடுவதென்று ஆயிற்று. நான் இதைத் தேடி விட்டுப் போகிறேன், இதிலென்ன தவறு? இதற்குத்தான் நீங்கள் பதில் சொல்கிறீர்கள், 'தேடிக் கொள், ஆனால் உன் வலையில் நீயே சிக்கி மீளத் தெரியாமல் புலம்புவாய், துவளுவாய்' என்று. உண்மை, நீங்கள் என் முந்தைய பதிவுகளில் இதற்கான அடையாளத்தைக் கண்டிருக்கவும் கூடும். ஆனால் அதன் பின்னும் தேடிக் கொண்டேயிருப்பதன் காரணம் என்ன? ஒரு வேளை என் இன்பம் இந்தப் புலம்பலில்தானோ? துவண்டு விழுவதில்தான் நான் இன்பம் காண்கிறேனோ?

எனக்குத் தோன்றுகிறது, என் இன்பம் பதில் தெரியாத கேள்விகளை அடுக்குவதில்தான் என்று. ம்ம்ம்...

Wednesday, April 05, 2006

ஒரு காயலான் கடையைப் பற்றி...

அது ஒரு காயலான் கடை.
ஆம், வெறும் காயலான் கடை.
ஓடும் பேருந்திலிருந்து பார்க்கப்பட்டது;
நாறும் புகையிலைச் சாற்றுக்காகக் காத்திருந்த
கண்ணாடி ஜன்னல் வழியே;
பார்த்தவன்,
இருபத்தாறு வயதான
கண்களைச் சுமந்துகொண்டு,
வீடு நோக்கிச் சென்றுகொண்டிருந்தான்;
சொல்லாத, மறுக்கப்பட்ட
காதலின் மிச்சத்தைச்
சுமந்து கொண்டும், இழந்து கொண்டும்;
தான் உடைந்ததெனக் கருதிய
இதயத்தின் துண்டுகளைக்
கவனமாக இறுக்கிப் பிடித்து;
கடந்த காலத்தினின்றும்
பிரித்தறியவியலாத,
புதியதோர் எதிர்காலத்தை நோக்கி.
அது ஒரு காயலான் கடை.

Saturday, March 25, 2006

நானும் நானோ? - 2

இப்பதிவு, சென்ற பதிவின் (நானும் நானோ?) பின்னூட்டங்களின் தொடர்ச்சியாக வருவது.

'நான்' என்பதுதான் எல்லாவற்றையும் பின்னிருந்து (அல்லது உள்ளிருந்து) நடத்துவது. இந்த 'நான்'-ஆல் உருவாக்கப்பட்டது, தொகுக்கப்பட்டது மனம். இந்த மனம் வளர்ச்சியடைந்த நிலையில், நுண்ணியவற்றை ஆராயும் வல்லமை பெற்றதாகிறது. அது தனது மூலமாகிய 'நான்'-ஐ ஆராயும்போதுதான் நான் முன்பு கூறிய தத்துவம் உருவாகிறது. செயப்படுபொருள் எழுவாயை ஆராய்வதால், இது மிகவும் சிக்கலாகிறது.

அதே நேரத்தில், இந்த மனம் 'நான்'-ஆல் இயக்கப்பட்டபோதும், 'நான்'-ஐ மறந்து அல்லது பொருட்படுத்தாமல் இருக்கும்போது நேரக்கூடிய ஓர் அழகிய தருணத்தைத்தான் என் சென்ற பதிவின் பின்னூட்டத்தில் குறிப்பிட்டேன். ஒரு நாய்க்குட்டி மடியில் கிடந்து விளையாடும்போது, மனம் 'நான்' என்ற வெளிப்படையான, ஒருமுகமான உணர்வு இல்லாமல் அடையும் இன்பம் குறைந்ததா என்ன?

ஏனோ, நாம்தான் இன்பம் நிலையானதல்ல. நிலையான இன்பம் பெற, இந்த 'நான்'-இன் மூலத்தை அறிந்து, ஆராய்ந்து உணர வேண்டுமென்று முயல்கிறோம். அது ஒரு வகையான வறட்சி நிலைக்கு இட்டுச் செல்கிறதல்லவா? ஒரு வேளை முதிர்ச்சியடைந்த நிலையில் அந்த முழுமையை அடையக் கூடுமோ என்னவோ? ஆயினும், நிகழ்காலத்தை அலட்சியப்படுத்தும் எதிலும் இன்பம் இருக்க முடியுமா என்ன? அப்படி இருந்தாலும், அது சுய இன்பத்தை விடவும் கீழானதல்லவா?

எனக்கென்னவோ, இந்த 'நான்' என்பது வெறும் வெறுமையானதொன்றாகத் தோன்றுகிறது. அதில் என்னென்னவோ இட்டு நிரப்புகிறோம். இதை உணரும் நொடியிலிருந்து, நிரப்பும் முயற்சியை விட்டு விடுவதே உசிதமானதாக இருக்க முடியும். ஆனால், நானோ, தத்துவம் என்று நான் கருதும் ஏதோ ஒன்றை இந்த வெறுமையில் இட்டு நிரப்பிக் கொண்டிருக்கிறேன். ஓர் எளிமையான, அழகான தருணம் (நான் தருணமென்பது, பொருளாகவோ, செயலாகவோ, உணர்வாகவோ அல்லது எண்ணமாகக் கூடவோ இருக்கலாம்), இந்தத் தத்துவத்தின் இயலாமையை அழகாக உணர்த்திச் செல்லும்.

இதோ, இப்போது கூட என் 'மனதில்' தோன்றியவற்றை இட்டு இப்பதிவை நிரப்பி விட்டேன். இதை மீண்டும் படிக்கும்போது எழும் கேள்விகளுக்கோ குறைவில்லை.

நான் எப்போதும் கூறுவது போல, இப் பதிவு அதை நான் எழுதும் நொடியில் எனக்குச் சரியென்று பட்டவற்றின் தொகுப்பு மட்டுமே.

Tuesday, March 14, 2006

நானும் நானோ?

பாழ் எழுதிய 'நீயாகிய நீ' கவிதையால் தூண்டப்பட்டு...

என்னைத் தொழுகிறேன்தான்.
அதன் முன்,
முன்னிற்கும் என்னில்,
நானாகிய என்னால்
செய்யவும்,
அறியவும் இயலாதன,
நான்
செய்யவும்,
அறியவும் விரும்புவன,
கண்டும், கேட்டும்,
அறிந்தும், அறியாமலும் அஞ்சுவன
அனைத்தையும் ஏற்றுவது கண்டிலையோ?
இனி,
நானும் நானோ?
என் முன்னிற்பதுவும் நானோ?

Thursday, March 02, 2006

எச்சரிக்கை



கடவுள், கருணை
என்று சொல்லிக்கொண்டு
யாரும் என்னிடம் வந்துவிட வேண்டாம்.

நான்
உங்கள் முகத்தில்
உமிழக் கூடும்.
அல்லது
என் கூர்நகங் கொண்டு
முகத்தைக் கிழிக்கக் கூடும்.

என்
அறியாமை கண்டு சிரிக்கவோ,
அல்லது
எனக்கு ஞானம் வர வேண்டி அழவோ,
உங்கள் மதம்சொல்லிக் கொடுத்திருக்கலாம்.
என்ன இழவானாலும்,
என் காதில் விழாதபடிச் செய்யுங்கள்.
அது நல்லது,
உங்களுக்கு.

Sunday, February 26, 2006

நேற்று



நேற்று, 'Gone with the wind' (Margaret Mitchell) படித்து முடித்தேன். இடையில் சிறிது இழுத்தது போல் தோன்றினாலும், மிகவும் அருமையான நாவல். எல்லா நல்ல நாவல்களையும் போல, முடித்த பின், சற்று நேரம் இருந்து யோசிக்க வைத்தது. இன்னும் கொஞ்ச நாளைக்கு அதன் கதாபாத்திரங்கள் மனதிலிருந்து நீங்கப் போவதில்லை.

முடித்தேனா? அடுத்து, பாலகுமாரனின் 'பயணிகள் கவனிக்கவும்' மூன்றாவது முறையாகப் படிக்கத் தொடங்கினேன். இதைக் கடைசியாகப் படித்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. அங்கங்கு வெட்டி, படித்து முடித்தேன், அப்படியொன்றும் சிறந்த நாவலாக இப்போது தோன்றவில்லை என்றாலும். பிறகு, வார இறுதியின் மிகப் பெரிய வேலையான துணி துவைப்பதை முடித்தேன்.

முடித்தேனா? அடுத்து, பாரதியார் கவிதைகள் புத்தகத்தை எடுத்து 'குயில் பாட்டு'. அதன் பின், 'கண்ணன் பாட்டு'.

இத்தகையதொரு நாள் புதிதில்லை எனக்கு. ஒரே நாளில் இவ்வளவு படிப்பதுவும் புதிதில்லைதான். வீட்டில் தனியாக இருந்தேன், அதுவும் புதிதில்லை. கல்லூரி நாட்களில் நான் மிகவும் ரசித்தது, அறை நண்பர்களனைவரும் ஊருக்குப் போய் விட்ட நாட்களைத்தான். பெங்களூர் வந்த பிறகு கூட, பெயர் தெரியாத தெருக்களில், பூங்காக்களில், ஏதோ கன்னட நிகழ்ச்சிகள் நடக்கும் அரங்குகளில் எனத் தனியாக அலைந்ததுண்டு.

நேற்று இயலவில்லை. 'வார்த்தை தவறி விட்டாய்' படித்ததும், புத்தகத்தை மூடி வைத்தேன். சட்டையை அணிந்து கொண்டேன். வீட்டை விட்டுக் கிளம்பி, தெருக்களில் இலக்கின்றி நடக்கத் தொடங்கினேன். வெறும் 'போர்' அடித்ததுதான் காரணம் என்று நினைத்தேன்.

இல்லை போலிருக்கிறது.

Thursday, February 23, 2006

மறப்போம்

ஒவ்வொரு நொடியும்
என் வாழ்க்கை முன்னின்று கேட்கும்
என்ன செய்யப் போகிறாய்? - என்று.

இன்னும் கூறும்.

இதுவரை செய்ததெதுவும்
அதற்குப் பொருட்டில்லையாம்.
எதிர்காலம் தருவதென்னவென்ற
பயமும் தேவையில்லையாம்.

பெற்றோரும் மற்றோரும்
உற்றோரும் அற்றோரும்
குறித்துக் கவலை வீணாம்.

பிறந்த இடம், கற்ற மொழி,
செய்த தொழில்,
இன்ன பிற அடையாளங்கள்
கூட்டி வரும் கூட்டம்
இவையொன்றும் புனிதமில்லையாம்.

இந்த நொடி இன்பம்
தருவதெல்லாம் தெய்வமாம்.
அடுத்த நொடி அதற்கும்
அர்த்தமொன்றும் இல்லையாம்.

ஊர் கூடிச் சொல்லி நிற்கும்
ஆயிரமாயிரம் விடயங்கள்
நல்லதென்றும், தீயதென்றும்,
திட்டமென்றும், கொள்கையென்றும்,
ஒன்றென்றும், வேறென்றும்,
உறவென்றும், பகையென்றும்,
நினையென்றும், மறவென்றும்.
அத்தனையும்
ஆனையிட்ட சாணியன்றி
வேறொரு பயனில்லையாம்.

அணைக்க நீண்ட
கரங்களை
அணைத்து மறப்போம்.
தீர்ப்பொன்றும் சொல்லோம்.

அன்பு சிந்திய
விழிகளை
அன்புக்கடல் கொண்டு நிறைத்து
அதையும் மறப்போம்.

ஆயுதம் கொண்டு வரும்
கரம் கண்டால்,
இயன்றால்,
அடித்து ஒடுக்குவோம்.
பயந்தால்,
பதறிப் புடைத்து ஓடுவோம்.

ஆயினும்,
அனைத்தையும் மறப்போம்,
அடுத்த நொடி.

Wednesday, February 22, 2006

பாராட்டு

அடுத்தவர் பாராட்டுக்காக
ஏங்கும் பழக்கம்
எப்போது தோன்றியது என்னில்?

வெளியில் சொல்வது வேறானாலும்,
ஒவ்வோர் அசைவும்
மற்றவர் ஆமோதிப்பை,
வியப்பை, ரசிப்பை
பாராட்டுக்களை
நோக்கி எய்யும் அம்பானது எப்போது?

அதுவும் போக,
எப்போதிருந்து அல்லது ஏன்
இந்த அம்புறாத்தூளி எனக்கு
அலுக்கத் தொடங்கிற்று?

அதன் இல்லாமை கண்டு
யாரேனும் என்னைப்
புகழ்தல் கூடும்
என்று உணர்ந்த கணமாயிருக்குமோ?

அது கிடக்கட்டும்!
ஏன் இந்தக் கவிதை இங்கே?
நீ உணர்ந்ததென்றால்,
அதை எழுதி வைக்க வேண்டிய
அவசியமென்ன?

உன்
ஆராய்ச்சி கண்டேனும்
யாராவது வியக்க வேண்டுமென்றா?

நக்கீரா!
குற்றம் கண்டுபிடித்தது போதும்.
நான் தப்புகிறேன்,
என் மௌனத்துள்.
.

Saturday, February 18, 2006

போதும் பயணம்

இன்னுமொரு வைக்கோல்
என் வண்டியில் ஏற்றுங்கள்.
எதற்காகவென்று தெரியாத சுமையுடன்
எங்கென்றும் என்னவென்றும் தெரியாத இலக்கு நோக்கி
ஏனென்று தெரியாமல் அலைந்து திரிவதை விட
அச்சு முறிந்து
சற்றே
இளைப்பாறுகிறேன்.

ஏதாவது எழுத

மீண்டும்

இந்த வலைப்பூவைத் தொடங்கி இரண்டு ஆண்டுகளாகி விட்டன. முதலில் இட்ட சில பதிவுகளைத் தவிர வேறு ஒன்றும் காணாதிருந்த இதில் மீண்டும் எனது ஈடுபாடு வந்திருக்கிறது. எத்தனை நாள் நீடிக்குமென்று அறியேன்.

சென்ற பதிவு, நீண்ட நாட்களுக்கு முன் இதற்கு முந்தைய பதிவுகளின் தொடர்ச்சியாக எழுதியதுதான்.
இப்போதும் 'ஏன் எழுத வேண்டும்' என்ற கேள்விக்குப் பதில் ஒன்றும் கிடைத்து விடவில்லைதான். ஆனால், ஏதாவது எழுத வேண்டும் என்ற எண்ணத்தை அங்கீகரிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் வந்திருக்கிறது.

மூன்று வயதில், எழுதிப் பழக வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது? ஆறு வயதில், புத்தகங்களைத் தேடிப் படிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏன் வந்தது? கேள்விகள் கேட்காமல் எல்லாவற்றையும் செய்தேனே? ஆனால், சிலவற்றை மறைத்துச் செய்ததும் உண்டு. ஏழு வயதில், பட்டுக்கோட்டை பிரபாகர் நாவல் படிப்பது அறிந்தால் அப்பா திட்டுவாரோ என்ற பயத்தால், ஒளிந்து கிடந்து படித்ததுண்டு. அப்பா திட்டுவார் என்ற பயம் ஏன் வந்தது? வேறு எதற்காவது திட்டு வாங்கிய அனுபவமா? அல்லது, இப் புத்தகங்களில் நான் அறிந்து கொள்ளக் கூடாத ஏதோ ஒன்று உள்ளதென்று தோன்றியதன் விளைவா? பதினோரு வயதில், பேருந்தில் மாணவிகள் உள்ள இடத்தில் சென்று நிற்க வேண்டுமென்று ஏன் தோன்றியது? ஆனால் அப்படி நிற்கக் கூடாது என்றொரு எண்ணமும் ஏன் உடனே தோன்றியது? இந்த இரண்டையும் கவனித்த மனதில் வியப்பொன்று ஏன் தோன்றியது?

இப்படி வாழ்வில் செய்த, செய்யாத பல காரியங்களுக்கு ஏன் என்று கேள்வி கேட்டதேயில்லை. கேட்டிருந்தால், இன்னும் அந்த இடத்திலேயே நின்று கொண்டிருந்திருப்பேனோ என்னவோ? ஆனால், அப்படி நின்று விட்டால்தான் என்னவாம்? நில்லாமல் ஓடி வந்ததில் கண்டதுதான் என்ன?

ஆக, ஏனென்று கேட்டதில் தவறில்லை. கேளாதிருந்ததிலும் தவறில்லை. இப்போது எழுதினாலும் தவறில்லை. அதைச் சுய விளம்பரத்துக்காக எழுதினாலும் தவறில்லை; (மயில் ஆடுவது சுய விளம்பரமில்லாமல் என்ன? செடி பூப்பது சுய விளம்பரமில்லாமல் என்ன?) சுய திருப்திக்காக எழுதினாலும் தவறில்லை; அல்லது சும்மா எழுதினாலும் தவறில்லை. எழுதாமலிருந்தாலும் தவறில்லை.

ஏன் எழுத? - 2

ஏன் எழுத வேண்டும்? - 2

சும்மா, ஒரு திருப்திக்காக, ஆத்ம திருப்தி என்று பெயர் செய்து கொண்டு, தனது பெயரைப் பிறர் உச்சரிப்பதில் இன்பங் காணுபவனாக, தன்னைப் பிறருக்கு அடையாளம் தெரிவதில் மகிழ்பவனாக எழுதுபவர்களும் உண்டு. அதாவது ஈகோவுக்கு உணவிடுவதற்காக. அது தவறா என்ற வாதத்திற்கு நான் செல்லவில்லை. நான் அதைச் செய்யப் போகிறேனா என்று எனக்குத் தெரிய வேண்டும். அவ்வளவுதான். ஒருவேளை நான் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேனோ, என்னவோ? மனித மனம்தான் எவ்வளவு விசித்திரமானது! எனக்கு இன்னும் தெரியவில்லை.

என் மனத்தினுள்ளும் இப்படி ஓர் ஆசை உள்ளூர இருப்பதை நான் அவ்வப்போது அறிய நேர்ந்திருக்கிறது. ஒன்றும் இல்லாமலா வீசியெறியக் கூடிய காகிதத்தில் எழுதாமல், உலகம் முழுதும் காண வாய்ப்பிருக்கும் இணையத்தில் எழுதிக் கொண்டிருக்கிறேன் இதை? என்றாலும், ஏதாவது எழுதி, பெயர் வாங்கி விட வேண்டும் என்பதை விட, எழுத்து என்பதன் வலிமையையும், பொறுப்பையும் ஒருங்கே உணர்ந்து, ஏதாவது உருப்படியாகச் செய்ய முடியுமா என்று முயல்வதுதான் எனது எண்ணமாக இருக்கிறது. உருப்படியாக யாருக்குச் செய்ய எண்ணம்? உண்மையில் எனக்குத்தான். எனக்குத்தானெனில் இதில் எழுத்தின் வலிமையும், பொறுப்பும் எங்கிருந்து வந்தன? அதை விட, எனது தேவைகளும், குறிக்கோள்களுமல்லவா முக்கியமாக இருக்கும்! உண்மைதான். ஓரளவு நெருங்கி வந்து விட்டேன் என்று நினைக்கிறேன். எனக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்துடன் ஏன் இணையத்தில் எழுத வேண்டும்? இந்தக் கேள்விக்குப் பதில் என்னிடம் இல்லையென்று தோன்றுகிறது. என்னுடைய டைரியில் எழுதிக்கொள்ளலாமே! அல்லது கணினியில் ஆனாலும் எனக்கே எனக்கென்று ஒரு file-ல் வைத்துக் கொள்ளலாமே! ஏன் இணையத்தில் எழுத வேண்டும்? ஏன்?

ஒவ்வொருவரும், தனக்கென்று செய்து கொள்வது, தன்னை மட்டும் மனதில் வைத்து அல்ல. உலகம் எப்படி இருக்க வேண்டும் என்று என் எண்ணங்கள் மூலம் முடிவு செய்கிறேனோ, அதையே நான் எனக்குச் செய்து கொள்கிறேன். உலகம் எப்படி இருக்க வேண்டும் என்பது இல்லையென்றாலும், இந்த உலகத்தில் நான் எவ்வாறு இருக்க வேண்டும் என்றுதான் சிந்திக்கிறேன். அதாவது, நாம் ஒவ்வொருவரும், எல்லா வகைகளிலும் சிறந்த உலகத்தில் வாழவே விரும்புகிறோம். அந்த 'சிறந்த உலகம்' என்பதற்கான definition ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறது. என் சிறந்த உலகம் என்பது அடுக்கு மாடிக் குடியிருப்பும், அனைத்து வசதிகளும் கைக்கெட்டும் தூரத்திலும் என்பதாக இருந்தால், நான் அத்தகையதொரு இடத்தில் சென்று என்னை வைத்துக் கொள்கிறேன். அதுவன்றி, சுற்றிலும் வயல் சூழ்ந்த ஒரு குடிசையே சிறப்பு என்று தோன்றினால், நான் அங்கு செல்ல விரும்புகிறேன். எளிமையாக இருப்பதுதான் சிறப்பு என்று நான் கருதினால் மட்டுமே, எளிமையாக இருக்க முயல்கிறேன். நான் இந்த உலகத்துடன் என்னைப் பொருத்திப் பார்த்தே நான் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை முடிவு செய்கிறேன். இதற்குக் காரணம் ஒருவன் தனித்துச் செயல்பட இயலாதவனாக இருப்பதல்ல. அவ்வாறு தனித்துச் செயல்படுவது அவனது இயல்பு அல்ல. அல்லது அவ்வாறு அவன் படைக்கப் படவில்லை.

இது சரிதானா என்பது எனக்குத் தெரிந்தாக வேண்டும். இன்னும் பார்ப்போம். உலகில் பெரும்பான்மையோர், பிறந்து, வளர்ந்து ஒரு நல்ல வருமானம் தரும் வேலையைத் தேடிக் கொண்டு, மனைவி மக்கள் என்று வாழ்க்கையை அமைத்துக்கொள்ள விரும்புகின்றனர். அதற்குக் காரணம், அதைத்தான் உலகம் இயல்பான வாழ்க்கை முறையாக அங்கீகரித்திருக்கிறது. சிலர், ஏதாவது செயற்கரிய செய்து, புகழ் பெற முயல்கின்றனர். காரணம், அதன் மூலம் உலகத்தின் கவனத்தை ஈர்க்கலாம். சிலர், உலகம் போகும் போக்கு குறித்துக் கவலை கொண்டவராக அதை மாற்றும், அல்லது சீர்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். காரணம், அவர்களது உலகத்துக்கும் தமக்குமிடையேயான உறவைக் குறித்த எண்ணமும், அதன் மேலான அக்கறையும். உலகம் என்ன சொல்லுமோ என்ற பயத்துடன் வாழ்பவர்கள் பெரும்பான்மை என்றால், உலகம் என்ன சொன்னால் என்ன என்பவர்களும், அதே உலகத்தைக் கவர்வதற்கான அல்லது அலட்சியப்படுத்துவதற்கான முயற்சியையே செய்கிறார்கள். ஆக, ஒருவன் தனித்தவனாக எந்த முடிவும் எடுப்பதாகத் தோன்றவில்லை. உலகம் அல்லது சமுதாயத்தைச் சார்ந்தே அவனது முடிவுகளும் அமைகின்றன.

இந்த வட்டத்தின் வெளியே வசிப்பவர்கள் யாரேனும் உண்டா? உண்டு. மனநிலை சரியில்லாதவர்கள். அவர்களை விட்டு விடுவோம். ஞானிகள் என்று யாரேனும் சொல்லக் கூடும். உலகத்தால் ஞானிகள் என்று அழைக்கப்பட வேண்டுமானால் அவர்கள் சில இலக்கணத்துக்குட்பட்டாக வேண்டும். உலகம் வகுத்த இலக்கணங்கள் எவையும் உலகத்தின் வெளியே இருப்பவையல்ல. இருந்தாலும், சிலர் உலகம் குறித்த எந்தக் கவலையுமின்றி, அக்கறையுமின்றி, பயமுமின்றி இருக்க முடியும் என்றே நானும் நம்புகிறேன். எனினும் அந்த சிறுபான்மையை விட்டு விடுவோம். (அந்த நிலையை அடைவதற்குச் சில முயற்சிகள் தேவையெனில், அவர்களை அந்த முயற்சி எடுக்கத் தூண்டியதற்கு உலகமே காரணமாக அமைந்திருக்கலாம் அல்லவா!)

-தொடரும்