Sunday, May 24, 2009

வெட்கமும், கொதிப்பும்

இலங்கைப் படுகொலைகள் குறித்த நாகார்ஜுனன் அவர்களின் பதிவு படித்தேன். அங்கு நான் எழுதிய எனது கருத்து.

அரசுகள் இவ்வாறு வன்முறை நிகழ்த்தும் சூழலில் தீவிரவாதம் தோன்றாதிருந்தால்தான் வியப்பு. அது பயங்கரவாதமாக மாறாதிருந்தால்தான் வியப்பு. எம்மில் பலருக்கு, இயலாமையும், கோபமும் தோன்றி, அன்றாட அலுவல்களில் கரைந்து போயின. இன்னும் சிலரில் கையறுநிலை நீங்காக் கசப்பையும், வெறுப்பையும் தோற்றுவித்திருக்கிறது. என் நண்பனொருவன், இந்தியப் பொருளாதாரத்தை நசுக்குவோம் என்று கூறிக்கொண்டிருக்கிறான். சற்றே பொருளாதாரம் ஓங்கியதால்தானே, அண்டை நாடுகளின் மேலான வல்லாதிக்கத்திற்கான கனவும், ஆசையும் என்பது அவன் வாதம்.

அறிவுப்ப்புலம் என்பதான ஒன்று என்ன செய்யக்கூடும் என்று நினைக்கிறீர்கள் நீங்கள்? என் புரிதலில், இன்னுமொரு தேசத்தில் அகதிகள் என்றொரு சொல்லின் அவசியம் நேராதிருப்பதைத் தடுப்பதே அறிவுப்புலத்தின் பணியாயிருக்க முடியும். ஆயினும், அதில் சிறிதேனும் வெற்றி கிட்டுமாவென்ற ஐயம் பெரிது. நம் கண் முன்னால், இந்தியா, இலங்கை உட்பட்ட நாடுகள் வெற்றிப் பெருமிதத்துடன் செய்து முடித்துள்ள காரியங்களை எதிர்த்துக் கேள்வி கூட எழவில்லையே இங்கு. மூவாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்ட செய்தி இரண்டாம் பக்கத்தில், முதல் பக்கத்தில் கருணாநிதியும், மன்மோகன் சிங்கும் இந்தியாவின் தலையீட்டின் காரணமாக அமைதி திரும்புவது மகிழ்ச்சியளிப்பதாகத் தம்பட்டம். இன்று, அவர்களுக்கிடையில் பேச்சு வார்த்தை அமைச்சர் பதவிகளுக்காக. யார் ஆண்டாலும் இதேதான் நிலை என்பது தெளிவாகப் புரிகிறது, ஆயினும் செய்த தவறுகட்குத் தண்டனை வேண்டாம் கண்டனம் கூட இல்லை யாருக்கும். மக்களுக்கு இத்தவறுகளில் பங்குண்டா?

வீட்டுக்கு வெளியே சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுவதைக் கண்டுகொண்டிருந்தேன். சற்றே வயதில்/உருவில் வலிய சிறுவர்கள் வைத்ததுதான் சட்டம் அங்கும். கண்டு பொருமுபவர்கள் ஓரம் நின்று ஓலமிட மட்டும்தான். அல்லது, கடமையைச் செய்தோமென்ற திருப்தியில் தீவிரவாதத்திலோ, வேறெதாவது வாதத்திலோ கலந்து வெகு நிச்சயமாக ஒடுக்கப்படவேண்டியதுதான். அல்லது, கண்டு பொருமும் ஒருவரிடம், நீ வந்து புரட்சி செய்யேன் என்று கேள்வி கேட்கலாம். இன்று பாதுகாப்பாகவும், நாளை பணக்காரனாகவும் இருந்து கொள்வதற்கான வழிமுறைகளைப் பார்த்து ஒதுங்கிக்கொள்ளலாம்.

எழுதுவதைப் படித்து பொதுக்கருத்து உருவாகும் காலம் இன்னும் மிச்சமிருக்கிறதா? அறிவுரீதியில் மக்களைத் திரட்டிய புரட்சி என்ற ஒன்று சாத்தியமா? வலியை உணர்ந்த மக்களின் குரல்வளை முறிக்கப்பட்டிருக்க, மற்றவர்கள் அதில் நூற்றிலொரு பங்கேனும் உணர முடியுமா? அவரவர்க்கான எலிப் பந்தயமும், ஊடக மயக்கமும் அதற்கு வழி விடுமா?

2 comments:

ttpian said...

தமிழன் கருனானிதி மெல்ல இந்தியனாக மாறி,இப்போது இதாலிய பிரஜை!
வாழ்நாள் முழுவதும் உன்னை நம்பி ஏமாந்தேனே!

வித்யாசாகரன் (Vidyasakaran) said...

அதிகாரத்துக்காக உழைக்கும் அரசியல்வாதிதானே, அது மட்டும்தானே அவர்.