Saturday, June 10, 2006

பிரார்த்தனை

சூலமங்கலம் ராஜலக்ஷ்மி பாடிய பாரதியின் 'காக்கைச் சிறகினிலே நந்தலாலா' பாட்டைக் கேட்டுக்கொண்டிருந்தேன். ஏனோ கண்ணில் கண்ணீர் பெருகிற்று. தேடினாலும் காரணம் கிடைக்கப் போவதில்லை. இந்த ஒலியலைகள் உள்ளே சென்று என்ன செய்கின்றனவென்று என்றுதான் அறிந்தேன்? காண்பதெல்லாம், ஏதோ அமைதி அல்லது நெகிழ்வு. ஏன்? தெரியாது. பக்தி? கேள்விகள் கேட்டு அதையும்தான் துரத்தியாயிற்றே. பக்தியுடன் எதையாவது பாடி அல்லது கேட்டு நீண்ட நாட்களாகி விட்டன. பிரார்த்தனை செய்தோ, இன்னுமதிகம் காலம்.

பிரார்த்தனை! ஒரு நண்பிக்காகப் பிரார்த்தனை செய்வதாக வாக்குக் கொடுத்திருக்கிறேன். காதல் பிரச்சினைதான். பிரார்த்தனை செய்கிறேனென்று சொன்னால் என்ன பொருள்? என்னால் வேறு ஒன்றும் செய்ய இயலாது என்று பொருள். அது தெரிந்துதான் தனக்காகப் பிரார்த்தனை செய்யக் கேட்டிருப்பாள். பிச்சைக்காரனிடம் பொன் குடமா கேட்பார்கள்? அவளுக்குத் தெரியாது, இந்தப் பிச்சைக்காரனிடம் திருவோடு கூட இல்லையென்று.

எத்தனை துயரங்கள்? எத்தனை பிரச்சினைகள்? வெவ்வேறு மதம். ஊர் என்ன சொல்லும்? அவன் என்ன சொல்வான்? இவன் என்ன சொல்வான்? அம்மா வருந்துவாரே! அப்பா வருந்துவாரே! குடும்ப கௌரவம் என்னாவது? மதம் மாற முடியாது, சுயமே அனுமதிக்காது அதை.

இதோ பிரார்த்திக்கிறேன். உனக்காக. தடை தாண்டி வெல்லும் திறன் உனக்குண்டு பெண்ணே! மகிழ்வுற்றிரு! இறையொன்றிருந்தாலும் இல்லையென்றாலும், அது கருணை வடிவமென்பது உண்மையென்றாலும், அல்லது ஒன்றையொன்று உண்டு வாழும் உயிர் படைத்துக் கண்டு களிப்புற்று வாழும் சக்தியென்றாலும், உன் வாழ்வு சிறப்புற வேண்டுகிறேன்!

உள்ளத் தெளிவோடிரு; உன் அன்பை நம்பு. அது உன்னைக் கரைசேர்க்கும். அது மட்டுமே!

2 comments:

G.Ragavan said...

உங்கள் துதி உங்கள் நண்பிக்கு நல்ல கதி தரட்டும். இறையருளால் அனைத்தும் கைகூடட்டும்.

வித்யாசாகரன் (Vidyasakaran) said...

மிகுந்த நன்றி, ராகவன்.