Tuesday, June 27, 2006

கடலில் சேர்ந்த ஆறு

நண்பர் ராசா என்னையும் ஒரு ஆறு பதிவு போடச் சொல்லியிருக்கார்.

என்ன எழுதறதுன்னு யோசிச்சா ஒண்ணுமே தோண மாட்டேங்குது. முதலாவது பேச்சுத் தமிழ்ல எழுதிப் பழக்கமில்ல. அப்புறம், சும்மா ஜாலிக்காக எழுதினதுமில்ல இது வரைக்கும். இப்பக் கூட, பிடிச்ச பாட்டு, படம்னு எழுத மனசு வரல. மயூரன் சொன்ன மாதிரி, இந்த மாதிரிப் பதிவுகள்ல சுய முன்னிறுத்தல் இருக்கறதுக்கான வாய்ப்புகளும் இருக்கு. அதாவது என்ன சொன்னா நம்மளைப் பத்தி நல்ல அபிப்பிராயம் உண்டாகும்னு தெரிஞ்சு அத எழுதறது. இப்பக் கூட, நான் பண்ணின தப்புகளைப் பத்தி எழுதினாக் கூட, அதுக்கும் பின்னாடி எனக்கு இருக்கிற உள்நோக்கம் எனக்குத் தெளிவாத் தெரியும். என்ன பண்றதுங்க, இப்படியே பழகிப் போச்சு. இதில இருந்து தப்பிச்சு எழுதலாம்தான் பொதுவா. ஆனா என்னைப் பத்தி, என்னோட குழப்பங்களைப் பத்தி, என்னோட பிரச்சினைகளைப் பத்தி மட்டுமே எழுதத் தோணுது. அவ்வளவு சுயநலம்.

இதோ, இப்ப நான் எட்டு வயசுல பண்ண ஒரு காரியம் பத்தி எழுத ஆரம்பிச்சேன். இதை ஊருக்கே சொல்லணுமா-னு ஒரு கேள்வி மனசுல. அவ்வளவுதான், அதை அழிச்சுட்டேன். இப்போ என்னதான் எழுத?

அதனால, நான் பண்ணியிருக்க வேண்டாம் அல்லது பண்ணியிருக்கணும்னு இப்போ நினைக்கிற, ஊருக்கே தெரிஞ்சாலும் தப்பில்லன்னு நான் நினைக்கிற ஆறு விஷயங்களை மட்டும் சொல்லப் போறேன். அடைப்புக்குறிக்குள்ள இருக்கறது என்னோட மனசாட்சி.

1. பத்தாவது படிக்கும்போது, பள்ளிக்கூடத்த விட்டு வேற பள்ளிக்கு மாறிப் போற ஒரு முன்னாள் நண்பன், வெளியே இருந்து நண்பர்களை அனுப்பிக் கூப்பிட்டப்போ, வீறாப்பா மாட்டேன்னு சொல்லாம இருந்திருக்கணும். ஒரு வருஷம் கழிச்சு அப்பா கூட வண்டியில உக்காந்து போறப்போ, அதே மாதிரி அவனும் அவங்கப்பா கூட வந்தான். ஒரு நொடி திரும்பிப் பாக்கத்தான் நேரம் இருந்துச்சு. அவனும் பாத்த மாதிரி இருந்தது. அவனுக்கும் அப்படித்தான் இருந்துருக்கும். (அப்போ, பெரிய கோவக்காரன், ஆனாலும் பின்னாடி வருத்தப்படற நல்ல மனசுக்காரன். அப்படித்தானே?)

2. பன்னிரெண்டாவதுல, தமிழ் செய்யுள் வகுப்பு நான் எடுத்தப்போ, வேதியியல் வாத்தியார் மேல இருக்கிற கோவத்துல, பெண்களைப் புகழ்ந்து இருந்த ஒரு கவிதை/செய்யுளைக் குதறி எடுத்து, மொத்தமா பெண்களைப் பத்தித் தப்பா சொல்லாம இருந்திருக்கணும். குறைஞ்சபட்சம், அதைப் பத்தி ஒரு பொண்ணு அடுத்த நாள் கேட்டப்போ, உள்மனசு சொன்ன மாதிரி அது தப்புனு ஒத்துக்கிட்டிருந்திருக்கணும். (ஓஹோ, வகுப்புல பாடம் எடுத்தீங்களோ? வாத்தியாரையே பகைச்சுக்கிட்டீங்களோ?)

3. அதே வருஷம், திருப்புத் தேர்வு எழுதும்போது வந்த பொருளாதாரப் பிரிவுக்குப் பாடம் எடுக்கிற டீச்சர், அரையாண்டுல எத்தனை பாடத்துல நூத்துக்கு நூறுனு ஆசையாவும், அக்கறையாவும் கேட்டபோதாவது, பதில் சொல்ல முடியாத உண்மை உறைச்சு கொஞ்சம் ஒழுங்காப் படிச்சிருக்கணும். ('நான் நல்லாப் படிச்சவன்தான், வயசுக் கோளாறு' அப்படின்னு சொன்னா ஒரு ஹீரோதான?)

4. என்னோட மாமா எனக்கு நியூமராலஜி பாத்து, பேரோட ஸ்பெல்லிங்கையும், கையெழுத்தையும் மாத்தச் சொன்னப்போ தைரியமா, எனக்கு நம்பிக்கை இல்லனு சொல்லியிருக்கணும். இப்போ அவங்களுக்கு எழுதுற மெயில்-ல மட்டும் அந்த ஸ்பெல்லிங் பயன்படுத்துற போலித்தனத்துல இருந்து தப்பிச்சிருக்கலாம். (பகுத்தறிவு?)

5. மனசுக்குப் பிடிச்ச பொண்ணு உக்காந்து பாத்துட்டிருக்கிற உற்சாகத்துல, உயரமான மரங்களுக்கு இடையில கட்டி வச்ச வலையில (இந்த வயசுல) குட்டிக் கரணம் போட்டுக் காட்டாம இருந்திருக்கணும். இப்போ எல்லாம் முடிஞ்சப்புறம், நினைச்சா என் மேலயே வர்ற கோவத்துல இருந்தாவது தப்பிச்சிருக்கலாம். ம்ம்ம்ம்.... ஒரு விதத்துல இது சிரிப்பாதான் இருக்கு. அவ்வளவு மோசமில்லை. (ஓஹோ! மூன்றாம் பிறை கமல்னு நினைப்பா?)

6. எத்தனையோ நண்பர்கள், தெரிஞ்சவங்க, சொந்தக்காரங்க எல்லார்கிட்டயும் கட்டாயம் கடிதம் போடறேன், ·போன் பண்ணறேன்னு சொல்லாம இருக்கலாம். குற்ற உணர்ச்சியாவது இல்லாம இருக்கும்.

இப்போ யோசிச்சு என்ன பண்ண? ஒண்ணும் பண்ணமுடியாது. அதாவது, ஆத்துத் தண்ணியைக் கடலுக்குப் போனப்புறம் குடிக்க முடியாது. காலம் கடந்து போச்சு. பெருமூச்சை விட்டுட்டு, இந்தப் பதிவையும் முடிப்போம்.

சரி, நான் ஒரு ஆறு பேரைக் கூப்பிடணுமாமில்ல! நான் அதைச் செய்யப் போறதில்ல. ஏன்னா, இந்த ஆறும் கடல்ல சேந்தாச்சு! (நம்ம பேருக்கு அர்த்தம் தெரியும்ல?)

2 comments:

Pavals said...

என்னடா நம்மள புடிச்சு இழுத்து விட்டிருக்கான்னு நினைச்சிருப்பீங்க போல.. இப்படி எதாவது புடிச்சு இழுத்தாத்தான் வெளிய வர்ரீங்க அதுக்குத்தான்..

//முதலாவது பேச்சுத் தமிழ்ல எழுதிப் பழக்கமில்ல. // முழுசும் படிச்சு பார்த்தா அப்படி தெரியலையே :)

வித்யாசாகரன் (Vidyasakaran) said...

ராசா,
அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல. கொஞ்சம் வேலை அதிகம். என்ன எழுத, ஏன் எழுதன்னு ஒண்ணும் தோணறதில்லை. படிக்கவே நிறைய இருக்கே!
சொல்லப் போனா, உங்களுக்கு நான் நன்றி சொல்லணும். உங்க வலைப்பூவில அந்தப் பதிவு போட்டதிலேர்ந்து இங்க நிறையப் பேர் வந்து பாக்கறாங்க போலிருக்கு. நீங்க பேரு 'வித்யா'னு போட்டிருக்கீங்க. எத்தனை பேர் ஏமாந்து போனாங்கன்னு தெரியலை! :-)

//முழுசும் படிச்சு பார்த்தா அப்படி தெரியலையே //
எனக்கே ஆச்சரியமாத்தான் இருக்கு. எப்பவும் பேசறதுதானே, அதான் கஷ்டமில்லாம வந்திருச்சு போல. எனக்கென்னமோ, உங்களோட இன்னொரு பதிவைப் படிக்கிற உணர்வு வருது. இதே மாதிரி நீங்க முன்னாடி ஒண்ணு எழுதியிருந்தீங்கன்னு நினைக்கிறேன். ஈயடிச்சான் காப்பியடிச்சுட்டேன். :-)

- வித்யா