Wednesday, February 22, 2006

பாராட்டு

அடுத்தவர் பாராட்டுக்காக
ஏங்கும் பழக்கம்
எப்போது தோன்றியது என்னில்?

வெளியில் சொல்வது வேறானாலும்,
ஒவ்வோர் அசைவும்
மற்றவர் ஆமோதிப்பை,
வியப்பை, ரசிப்பை
பாராட்டுக்களை
நோக்கி எய்யும் அம்பானது எப்போது?

அதுவும் போக,
எப்போதிருந்து அல்லது ஏன்
இந்த அம்புறாத்தூளி எனக்கு
அலுக்கத் தொடங்கிற்று?

அதன் இல்லாமை கண்டு
யாரேனும் என்னைப்
புகழ்தல் கூடும்
என்று உணர்ந்த கணமாயிருக்குமோ?

அது கிடக்கட்டும்!
ஏன் இந்தக் கவிதை இங்கே?
நீ உணர்ந்ததென்றால்,
அதை எழுதி வைக்க வேண்டிய
அவசியமென்ன?

உன்
ஆராய்ச்சி கண்டேனும்
யாராவது வியக்க வேண்டுமென்றா?

நக்கீரா!
குற்றம் கண்டுபிடித்தது போதும்.
நான் தப்புகிறேன்,
என் மௌனத்துள்.
.

No comments: