ஒவ்வொரு நொடியும்
என் வாழ்க்கை முன்னின்று கேட்கும்
என்ன செய்யப் போகிறாய்? - என்று.
இன்னும் கூறும்.
இதுவரை செய்ததெதுவும்
அதற்குப் பொருட்டில்லையாம்.
எதிர்காலம் தருவதென்னவென்ற
பயமும் தேவையில்லையாம்.
பெற்றோரும் மற்றோரும்
உற்றோரும் அற்றோரும்
குறித்துக் கவலை வீணாம்.
பிறந்த இடம், கற்ற மொழி,
செய்த தொழில்,
இன்ன பிற அடையாளங்கள்
கூட்டி வரும் கூட்டம்
இவையொன்றும் புனிதமில்லையாம்.
இந்த நொடி இன்பம்
தருவதெல்லாம் தெய்வமாம்.
அடுத்த நொடி அதற்கும்
அர்த்தமொன்றும் இல்லையாம்.
ஊர் கூடிச் சொல்லி நிற்கும்
ஆயிரமாயிரம் விடயங்கள்
நல்லதென்றும், தீயதென்றும்,
திட்டமென்றும், கொள்கையென்றும்,
ஒன்றென்றும், வேறென்றும்,
உறவென்றும், பகையென்றும்,
நினையென்றும், மறவென்றும்.
அத்தனையும்
ஆனையிட்ட சாணியன்றி
வேறொரு பயனில்லையாம்.
அணைக்க நீண்ட
கரங்களை
அணைத்து மறப்போம்.
தீர்ப்பொன்றும் சொல்லோம்.
அன்பு சிந்திய
விழிகளை
அன்புக்கடல் கொண்டு நிறைத்து
அதையும் மறப்போம்.
ஆயுதம் கொண்டு வரும்
கரம் கண்டால்,
இயன்றால்,
அடித்து ஒடுக்குவோம்.
பயந்தால்,
பதறிப் புடைத்து ஓடுவோம்.
ஆயினும்,
அனைத்தையும் மறப்போம்,
அடுத்த நொடி.
Thursday, February 23, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment