Thursday, August 19, 2010

மனித உரிமைக் காவலர்கள் பொய் வழக்கில் கைது

தமிழக அதிகாரிகள் அவர்களால் கைது செய்யப்பட்ட ஐந்து மனித உரிமைக் காவலர்களை விடுவிக்க வேண்டும்; அவர்களுக்கெதிரான பொய் வழக்குகளைக் கைவிட வேண்டும்; அத்துடன் அவர்களைத் துன்புறுத்தி மிரட்டியமைக்கு மாநிலக் காவல்துறையைப் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும்"
- மனித உரிமைக் கழகம் (ஆம்னெஸ்டி இன்டர்னேஷனல்)

மதுரை 'பீப்பிள்ஸ் வாட்ச்' அமைப்பு நடத்திய மனித உரிமைப் பயிற்சியின் பங்கேற்றுள்ள ஐந்து மனித உரிமைக் காவலர்கள் - பாரதி பிள்ளை, நிகர்கா ப்ரியா, சுதா, ஞான திரவியம் மற்றும் ஆனந்தன் - ஆகஸ்ட் 15 இரவில் பொய்க் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப் பட்டனர். சுரேஷ் என்கிற தலித் இளைஞர் ஒரு காவல் அதிகாரியால் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் விசாரணை நடத்தப்படாததைக் குறித்து உண்மை அறியும் முயற்சியில் வீரவநல்லூர் சென்றபோது இது நடந்தது. கைதுக்கு முன்பு, அவர்கள் ஆறு மணி நேரம் காவல் நிலையத்தில் வைக்கப் பட்டிருந்தனர்.

அவர்கள் இ.பி.கோ 170 (அரசு அலுவலராக ஆள்மாறாட்டம் செய்தல்), 353 (அரசு அலுவரரைப் பணிசெய்யவொட்டாமல் தடுத்தல்), 416 (ஆள்மாறாட்டம் மூலம் ஏமாற்றுதல்), 506 (கிரிமினல் மிரட்டல்) ஆகிய குற்றங்கள் சாட்டப்பட்டு, சிறையிலடக்கப் பட்டுள்ளனர். காவல்துறையினர் 'பீப்பிள்ஸ் வாட்ச்'-இன் மதுரை இயக்குனர் ஃகென்றி அவர்களைத் 'தலைமறைவான குற்றவாளி'யாக அறிவித்துள்ளனர்.

இது குறித்து மனித உரிமைக் கழகம் (ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல்) வெளியிட்ட அறிக்கை

NDTV காணொளி


-------------------------------------------------------------------

அதிகாரம் கண்களற்றது,
தன்னிலும் வலிய அதிகாரத்தின் பாதத்தை நக்க அதற்கு நாக்குண்டு;
அடங்கிக் கிடக்கும் ஏதிலிகளை நசுக்கிச் செல்ல அதற்கு நாறும் கால்களுண்டு;
உரிமைக் குரலெழுப்பும் குரல்வளைகளை முறிக்க அதற்குக் கைகளுண்டு;

அதன் கைகள் கொள்ளாத அளவுக்கு அதிகமான குரல்வளைகள்,
அதுவொன்றே இப்போதைய நம்பிக்கை.

Thursday, December 17, 2009

நீ தூங்கும் நேரத்தில்

உழைத்துக் களைத்து நீ
உறங்குகின்ற ஓரிரவில்
அருகினில் நானமர்ந்து,
அன்பின் அமைதியும், அழகும்,
என்னுள்ள நிலத்தில் விரிக்கும்
பரவச நிழல் பருகும் பறவையாயிருப்பேன்.

மலரமரும் வண்ணத்துப் பூச்சியாய்,
உன் நெற்றியில் இதழ் பதிக்கச் சொல்லும்
ஆசைக்கு அணையிட்டு,
உன் அலைக்கூந்தல் தலைவருடி
அமர்ந்திருப்பேன்,
துளியும் நீ உணராமல்.

நீயென்னும் அற்புதம்
என் வாழ்வில் நிகழ்ந்ததெண்ணி,
நெஞ்சம் நெகிழ்ந்திருப்பேன்,
கண்கள் பனித்திருப்பேன்.

பிறகு,
உறங்கும் உருவத்தின்
கண்ணாடிப் பிம்பம் போல்,
உன்னருகில் நான் கிடந்து,
நீயாக மாறுகின்ற
நினைவினில் மிதந்திருப்பேன்.

Saturday, October 10, 2009

'நளிர்' விமர்சனக் கூட்டத்தில் பார்வையாளனாக - 2

முதல் பகுதி - 'நளிர்' விமர்சனக் கூட்டத்தில் பார்வையாளனாக - 1

தொடர்ச்சி ---

கோணங்கியும், வாசுவைப் போலவே, நாகார்ஜுனன் இணையத்தளத்தை விடுத்து சிறு பத்திரிகைகளில் எழுத வர வேண்டுமென்று கூறினார்.

அடுத்து, தமிழவன் பேசினார். அவரது நெல்லை வழக்குப் பேச்சு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கூட்டத்திற்கு வரும் வழியில் துணை முதல்வர் செல்லும் காரணத்தால் செய்யப்பட்ட போக்குவரத்துக் கெடுபிடிகள் குறித்துக் கூறி, அறுபதுகளில் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் கருணாநிதியின் பின்னால் அணிவகுத்துச் சென்ற காலத்தில் இப்படியொரு நிலை வருமென்று நினைக்கவில்லை என்றார்.
நாகார்ஜுனன் பதிவுகளில் கூறுகின்ற பல்வேறு மேற்குலகச் சிந்தனையாளர்களின் பெயர்களும், சிந்தனைகளும் காண்பவர்க்கு பயமுறுத்துவது போல் தோன்றலாம், ஆனால் இப்போக்கு தவறானதல்ல, தனியானதுமல்ல. இந்திய மொழிகள் பலவற்றிலும் இது செய்யப்படுகிறது என்றார்.
நாகார்ஜுனனுடனான தனது தொடர்பு உருவான காலத்தை நினைவு கூர்ந்து கூறினார். கோணங்கிக்கும், நாகார்ஜுனனுக்குமான சிந்தனை ஒருமையைக் கூறும் விதத்தில், ‘நாகார்ஜுனன் நாவல்கள் எழுதுவதில்லை, அவற்றைக் கோணங்கி எழுதுகிறார்’ என்றார். சண்முகம் அவர்கள் கூறியது போல, தமிழ்ச் சூழலிலிருந்து தொலைவில் வசிப்பவர்களிடையே தமிழ் மீதான, தனித்தன்மை மீதான ஈடுபாடு கூடுகிறது, தமிழகத்தில் உள்ளது போல எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு போகத் தோன்றுவதில்லை என்று பொருள்படக் கூறினார்.

பிறகு, நாகார்ஜுனன் பேச எழுந்தார். தன் மொழி குறித்துக் கூற வந்தவர், லண்டனில் பணி காரணமாக, உடன் தமிழில் பேச அதிகம் யாருமில்லாததன் காரணமாக, தமிழ் பேச வாய்ப்புக் கிடைப்பது எப்போதாவதுதான் என்று கூறினார். தமிழக இலக்கிய உலகில் நிலவும் அரசியலும் தனக்குத் தெரியாது என்றார். ஆங்கிலத்தில் எழுதினால் கிடைக்கும் பணமும், பெயரும் அதிகமென்றாலும், அது தன்னால் இயலாததல்லவென்றாலும், தமிழில் எழுதவில்லையென்றால் தான் இல்லை என்றார். மேலும் ஆம்னெஸ்டியில் பணிபுரியும் பின்புலத்தில், அவரது பணி, நம் அனைவரையும் பிரதிநிதித்துவப் படுத்துவதாகவும் இருப்பதில் அவருக்குள்ள கூடுதல் சுமையை, கூட்டத்தினர் உணர்ந்துகொள்ள வேண்டினார்.

கடந்த இரு ஆண்டுகளாகத் தான் கடினமாக உழைத்திருப்பதாகவும், அதற்கான பலனே இந்நூல்களென்றும் கூறினார். பத்திருபது ஆண்டுகளுக்கு முன்னிருந்த ஆற்றலைச் சில சமயம் தற்போது உணர்ந்ததாகவும், ஆயினும் இத்தகைய உழைப்பை உடல் தாங்குவதில்லை என்பதால் சற்றே மட்டுப்படுத்தியிருப்பதாகவும் கூறினார்.

இலக்கியப் போக்கு என்பதைப் பத்தாண்டுகளில் கணக்கிடுவது சரியல்ல, அது நூறு, நூற்றைம்பது ஆண்டுக் கணக்கிலேயே அறியப்படக் கூடியது என்றார். ”தென்னகத்தின் வரலாறு இன்னும் யாராலும் முழுமையாக, சரியாக எழுதப்படவில்லை, சென்ற நூற்றாண்டுகளின் இந்திய வரலாறு என்பது வங்கத்தை மையமாகக் கொண்டே கூறப்பட்டிருக்கிறது. சில முயற்சிகள் செய்யப்பட்டிருந்தாலும் அவை நிகழ்ச்சிகளைக் கூறிச் செல்வதான அளவில் நின்று போய் விட்டன, அதன் மீதான விரிந்த பார்வையைக் காணவில்லை. கோணங்கி கூறியது போல, இயற்கை என்பதை நம் இலக்கியத்தில் காண இயலவில்லை. இயற்கையுடன் இயைந்த, ஒரு பரந்த காலகட்டத்தைக் கூறும் வகையிலான பணிகள் செய்யப்படவில்லை. நாவலாக அதை எழுதுவது சற்றே எளிது, ஆனால் அது போதாது” என்றவர், தான் அத்தகையதொரு பணியில் ஈடுபட்டிருப்பதாகவும், இன்னும் இரு ஆண்டுகளில் அதனை எதிர்பார்க்கலாமென்றும் கூறினார்.

கூடங்குளம் குறித்து சண்முகம் அவர்கள் கூறியதன் தொடர்ச்சியாக, எண்பதுகளில் அவரும் நண்பர்களும் தீவிரமாக இயங்கியிருந்தபோதும், அதன் பின் நடந்தவற்றை அவர்களால் முன்கூற இயலாமல் போனதானது பணிவைக் கற்றுத் தருவதாகவும், இப்பணிவுடனே எதிர்வரும் செயல்களைச் செய்யவேண்டுமென்றும் கூறினார்.
சிறுபத்திரிகைகளில் எழுதுவது குறித்துக் கூறும்போது இணையம் என்பது ஓர் இடைநிலை ஊடகம் மட்டுமே என்றார்.

நிறைவு செய்யுமுன்பு, வளர்மதியைப் பேச அழைத்தார் பேரா வீ.அரசு. வளர்மதி, இணையத்தின் ஊடக சுதந்திரத்தை விதந்து பேசினார். தனது மார்க்ஸ் குறித்த கட்டுரையை எந்தச் சிறுபத்திரிகையும் வெளியிடாத நிலையில் கீற்றில் வெளியிட இயன்றதைச் சுட்டிக்காட்டினார். இலக்கிய உலகில் விவாதங்கள், தனி மனித விரோதமின்றி நடைபெற வேண்டுமென்றவர், தேவைப்பட்டால் தான் கடுமையாகப் பேசவும் தயங்க மாட்டேன் என்றார். இணையத்தின் சுதந்திரம் பற்றி பதிலிறுத்த அரசு, சுதந்திரம் என்பது ஊடகம் யார் கையிலுள்ளது என்பதைப் பொறுத்ததுதானேயொழிய, இணையம், அச்சு என்ற வேறுபாடு இல்லை என்றார்.

கூட்டம் நிறைவுபெற்றது.

Tuesday, October 06, 2009

'நளிர்' விமர்சனக் கூட்டத்தில் பார்வையாளனாக - 1

கடந்த வெள்ளியன்று சென்னையில் நடந்த நாகார்ஜுனன் அவர்களின் நளிர் என்ற நூலின் விமர்சனக் கூட்டத்தில் நானும் ஒரு பார்வையாளனாக இருந்தேன்.

புதனன்று இரவுதான் இக் கூட்டம் நடப்பது குறித்து அறிந்தேன். கட்டாயம் செல்ல வேண்டுமென்ற ஆவல் உந்தித் தள்ளினாலும், நான் அங்கு என்ன செய்யப் போகிறேன் என்று தோன்றியதும் உண்மை. ஆயினும் 'இரும்பு அடிக்கும் இடத்தில் ஈ' என்றில்லாமல், 'பூக்கள் மலரும் தோட்டத்தில் பூச்சி' என்ற அளவிலாவது எனக்கும் இந்நிகழ்வுக்குமான உறவு இருப்பதைப் போகத் தூண்டிய ஆர்வமே உணர்த்தியதால், சென்று வேடிக்கை பார்த்து விடுவது என்று முடிவு செய்தேன்.

அரை மணி நேரம் தாமதமாகத்தான் தொடங்கியது கூட்டம். நான் நூலக அரங்கத்தை அடைந்தபொழுது ஒவ்வொருவராக வரத் தொடங்கியிருந்தார்கள். ஒரு சிலரது புகைப்படத்தை எங்கோ வலைப்பதிவுகளில் கண்டதாகத் தோன்றினாலும் சென்று பேசி அறிமுகம் செய்துகொள்ளவில்லை. எனது தன்னடங்கிய இயல்புதான் காரணமெனினும், அத்துடன் சென்ற நோக்கத்தைத் தவிர வேறெதையும் செய்ய ஆர்வமில்லாதிருந்ததும் ஒரு காரணம்.

நாகார்ஜுனன், அவரது தாயார், எழுத்தாளர் கோணங்கி, கவிஞர் குட்டி ரேவதி ஆகியோர் மட்டுமே எனக்கு முன்பே அடையாளம் தெரிந்தவர்கள். பேராசிரியர் வீ.அரசு, தமிழவன், சண்முகம், வாசு ஆகியோரைக் கண்டதும், அவர்களது விமர்சன உரையைக் கேட்டதும் மகிழ்ச்சி. இணையத்தில் வளர்மதியைப் படித்திருக்கிறேன், இன்று காணும் வாய்ப்பும் கிட்டிற்று.

பேராசிரியர் வீ.அரசு அவர்கள் நாகார்ஜுனனுடைய ஃப்ரெஞ்ச் மொழித் தொடர்பு, கவிதைத் தமிழாக்கம் என்பன குறித்துப் பேசத் தொடங்கினார். இருந்தாலும், அதில் முற்றிலும் உட்புகவில்லையென்று எனக்குத் தோன்றியது. அது தவிர்த்த, நளிர் குறித்த பல்வேறு கருத்துக்கள் கூறினார். நளிரில் காணக்கிடைக்கும் ஈழம் குறித்த கட்டுரைகளின் சோகம் குறித்தும் அவர் பேசினார் என்று நினைக்கிறேன். ஆர்தர் ரைம்போவின் கவிதகளைத் தமிழாக்கியதில் நாகார்ஜுனன் பயன்படுத்திய தமிழ்ச் சொற்கள் குறித்தும் பேசினார்.

வாசு ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த விமர்சன உரையைப் பார்த்துப் பேசினார். அவ்வுரை, நல்ல கூர்ந்த பார்வையுடன், அகன்ற அறிவுடன் நாகார்ஜுனனின் மூன்று கட்டுரைகளை அணுகி, அவை குறித்த பார்வையை விரிவாக விளக்குவதாக இருந்தது. திணை இசை சமிக்ஞையில் நாகார்ஜுனன் எழுதும் தீவிர இலக்கியம், தத்துவம் குறித்த பதிவுகளில் உரையாடல் என்பது குறித்து வருந்தினார். அவற்றைத் தொடர்ந்து வாசித்தாலும் உரையாடுமளவு சரக்கில்லாதவன் என்ற முறையிலும், இடையில் வாசிக்காமல் விட்டு இப்போது வாசிக்கும்போது சில கேள்விகள் தோன்றினாலும் கேட்காதவன் என்ற முறையிலும் எனக்குச் சற்றே குற்ற உணர்வு தோன்றாமலில்லை.
வாசுவின் உரையில் 'முக்கியம்' என்ற சொல் அடிக்கடி வந்தபோது அதில் சிக்கிக் கொண்டது மனம். 'significant' என்பதைத்தான் சொல்கிறார் என்று உணர்ந்தாலும், அதற்குத் தமிழில் வேறு நல்ல சொல் வேண்டுமென்று ஏனோ தோன்றியது.
வாசுவின் விமர்சன உரையை முழுவதுமாக நாகார்ஜுனன் திணை இசை சமிக்ஞையில் வெளியிடுகிறார்.

சண்முகம் அவர்களைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. தாழ்ந்த குரலில், சீரான வேகத்தில் தனது கருத்துக்களைக் கூறினார். நாகார்ஜுனன் பத்து வருடங்களாக ஏன் எழுதவில்லை என்று கேட்பவர்கள், அவர் இன்றும் லண்டனில் இருந்தும் ஏன் தமிழில் எழுதுகிறார் என்று எண்ணிப் பார்க்க வேண்டும் என்ற பொருள்படக் கூறினார். அதற்கு முன் தினம் நடந்த கூட்டத்தில், ஏதோ விவாதம் நடைபெற்றிருந்ததென்று அறியக் கிட்டியது. நவீனம், பின்நவீனம், மாயாவாத யதார்த்தம் போன்ற இலக்கியப் போக்குகளைத் தமிழில் பின் தொடர்வதையும், அவற்றின் போதாமையின்போது வேறு சில போக்குகளில் சென்று சேர்வதைக் குறித்தும் கூறினார். ஏன் இவற்றைத் தொடர்ந்த புதிய முறை ஒன்று நம்மிடையே தோன்றவில்லை என்று என் அறியாமனம் எண்ணிற்று. அதற்கான பதில், நாகார்ஜுனன் உரையில் மறைமுகமாகவேனும் கிட்டிற்று.

எண்பதுகளில் நாகார்ஜுனன் உள்ளிட்டவர்கள் தீவிரமாக எதிர்த்துப் போராடிய கூடங்குளம் அணு உலைத் திட்டம் இன்று எவ்வித எதிர்ப்புமின்றி நடந்தேறுவதன் முரண் குறித்தும் சண்முகம் கூறினார். நியாயம்தானே! சிறுவயதில் நெல்லை செல்லும்போதெல்லாம் கூடங்குளம் என்ற பேருந்துப் பெயர்ப் பலகையைக் காணும்போது மனதில் தோன்றிய குறுகுறுப்புக்கு, நாகார்ஜுனன் போன்றோர் செய்த போராட்டங்கள் குறித்து அப்போது வாசித்ததுதான் காரணமாயிருந்திருக்க வேண்டும். அதை அடுத்து நான் கூடங்குளம் குறித்து அறிவது, பல ஆண்டுகட்குப் பின்னர் அவ்வப்போது நடக்கும் சிறு போராட்டங்களும், திட்டங்கள் நிறைவேறுவது குறித்து வெளிவரும் வெற்றி அறிவிப்புகளுமே. இரண்டுமே தமிழகப் பொதுமக்களுக்குப் பொருட்படுத்தத் தேவையில்லாதனவாக இருக்கின்றன.

கோணங்கி அவர்களின் உரையில் அவர் கூறிய கருத்துக்கள் சில, முக்கியமாக, இயற்கையைக் கண்டுகொள்ளாத இலக்கியமும், அறிவும் என்ன பயன் தர இயலும் என்று அவர் வினவியது, ஏற்கனவே சில கட்டுரைகளில் வாசித்திருந்தவையாக இருந்தாலும், மனதில் ஆழப் பதிவதாக இருந்தது. 'உங்கள் நகரத்தின் அத்தனை நூலகங்களிலிருந்தும் உள்ள புத்தகங்களைக் கொண்டு அரை டம்ளர் தண்ணீரைத் தருவிக்க முடியுமா' என்றார் அவர். 'இனி வரும் கால இலக்கியங்களில் நீர்தான் முக்கியமான பாத்திரமாக இருக்கப்போகிறது' என்று அவர் கூறியதன் காரண, காரியங்கள் மனதில் சட்டெனப் புலப்பட்டன.

-- தொடரும்

Tuesday, May 26, 2009

இலங்கையின் சித்தம்; இந்தியாவின் பாக்கியம்

இந்தியா, பாகிஸ்தான், சவுதி அரேபியா, லிபியா, ரஷ்யா, இந்தோனேசியா, மலேசியா, பக்ரைன், க்யூபா, எகிப்து, நிகரகுவா, பொலிவியா - இவைதான் இலங்கை அரசு ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கழகத்தில் கொண்டு வரும் தீர்மானத்திற்கு ஆதரவு தந்து கையொப்பமிட்டிருக்கும் நாடுகள்.

தீர்மானத்தில் கூறப்பட்டுள்ள இரு பகுதிகள்.

மனித உரிமைப் பாதுகாப்பு என்பது பேச்சுவார்த்தை, ஒத்துழைப்பின் அடிப்படையிலமைய வேண்டும். மேலும், அதன் குறிக்கோள் உறுப்பு நாடுகளின் மனித உரிமை சார்ந்த கடமைகளை நிறைவேற்றும் திறனை வலுப்படுத்துவதாக அமைய வேண்டும்.

இந்தத் தீர்மானம் இலங்கை அரசு வேறுபாடுகளைக் களைந்து, புலிகளால் பணயமாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த பல பத்தாயிரக் கணக்கான மக்களை விடுவித்ததையும், இலங்கை மக்களுக்குப் பாதுகாப்பையும், அமைதியையும் உறுதி செய்ய மேற்கொண்ட முயற்சிகளையும் வரவேற்கிறது.


இதில் இந்தியாவின் கையொப்பம் செய்யப்பட்டாகி விட்டது. தமிழக முதல்வர் எழுதிய கடிதம் எதற்காக? யாரை ஏமாற்ற? எந்த அறியாமையின் அடிப்படையில்? அல்லது எந்த அறியாமையின் மேலுள்ள நம்பிக்கையில்?

------------------------------------------------------------------------------

இது இவ்வாறிருக்க, இலங்கை அரசின் போர்க் குற்றங்களை விசாரிக்கக் கோரி, ஸ்விஸ் மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் கொண்டுவந்துள்ள தீர்மானத்தை ஜெனிவாவைச் சேர்ந்த 'யு என் வாட்ச் அமைப்பு' வலுவற்றது என்றும் ஏமாற்றமளிப்பது என்றும் விமர்சித்துள்ளது.

மேலும் கூறியவை,

இத் தீர்மானம் மிகச் சுருக்கமானது, மிக மிகத் தாமதமானது

சர்வதேச விசாரணைக்குப் பதிலாக இலஙகை அரசைத் தன்னைத்தானே விசாரித்துக் கொள்ளச் சொல்லும் இத்தீர்மானம் நகைப்புக்குரியது. ஐநாவுடனான ஒத்துழைப்புக்காகவும், இனப் பாகுபாட்டுக்கெதிரான நடவடிக்கைகளுக்காகவும் இத்தீர்மானம் பாராட்டுகிறது, உண்மையோ அதற்கு நேரெதிரானதாயிருக்க.

2006-இல் ஐரோப்பிய யூனியன் கொண்டுவந்த தீர்மானத்தைப் பின் வாங்காமல் முன்னெடுத்துச் சென்றிருந்தால், இன்று பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காக்கப்பட்டிருக்கலாம்.




நன்றி:
http://blog.unwatch.org/
http://nagarjunan.blogspot.com/

Sunday, May 24, 2009

வெட்கமும், கொதிப்பும்

இலங்கைப் படுகொலைகள் குறித்த நாகார்ஜுனன் அவர்களின் பதிவு படித்தேன். அங்கு நான் எழுதிய எனது கருத்து.

அரசுகள் இவ்வாறு வன்முறை நிகழ்த்தும் சூழலில் தீவிரவாதம் தோன்றாதிருந்தால்தான் வியப்பு. அது பயங்கரவாதமாக மாறாதிருந்தால்தான் வியப்பு. எம்மில் பலருக்கு, இயலாமையும், கோபமும் தோன்றி, அன்றாட அலுவல்களில் கரைந்து போயின. இன்னும் சிலரில் கையறுநிலை நீங்காக் கசப்பையும், வெறுப்பையும் தோற்றுவித்திருக்கிறது. என் நண்பனொருவன், இந்தியப் பொருளாதாரத்தை நசுக்குவோம் என்று கூறிக்கொண்டிருக்கிறான். சற்றே பொருளாதாரம் ஓங்கியதால்தானே, அண்டை நாடுகளின் மேலான வல்லாதிக்கத்திற்கான கனவும், ஆசையும் என்பது அவன் வாதம்.

அறிவுப்ப்புலம் என்பதான ஒன்று என்ன செய்யக்கூடும் என்று நினைக்கிறீர்கள் நீங்கள்? என் புரிதலில், இன்னுமொரு தேசத்தில் அகதிகள் என்றொரு சொல்லின் அவசியம் நேராதிருப்பதைத் தடுப்பதே அறிவுப்புலத்தின் பணியாயிருக்க முடியும். ஆயினும், அதில் சிறிதேனும் வெற்றி கிட்டுமாவென்ற ஐயம் பெரிது. நம் கண் முன்னால், இந்தியா, இலங்கை உட்பட்ட நாடுகள் வெற்றிப் பெருமிதத்துடன் செய்து முடித்துள்ள காரியங்களை எதிர்த்துக் கேள்வி கூட எழவில்லையே இங்கு. மூவாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்ட செய்தி இரண்டாம் பக்கத்தில், முதல் பக்கத்தில் கருணாநிதியும், மன்மோகன் சிங்கும் இந்தியாவின் தலையீட்டின் காரணமாக அமைதி திரும்புவது மகிழ்ச்சியளிப்பதாகத் தம்பட்டம். இன்று, அவர்களுக்கிடையில் பேச்சு வார்த்தை அமைச்சர் பதவிகளுக்காக. யார் ஆண்டாலும் இதேதான் நிலை என்பது தெளிவாகப் புரிகிறது, ஆயினும் செய்த தவறுகட்குத் தண்டனை வேண்டாம் கண்டனம் கூட இல்லை யாருக்கும். மக்களுக்கு இத்தவறுகளில் பங்குண்டா?

வீட்டுக்கு வெளியே சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுவதைக் கண்டுகொண்டிருந்தேன். சற்றே வயதில்/உருவில் வலிய சிறுவர்கள் வைத்ததுதான் சட்டம் அங்கும். கண்டு பொருமுபவர்கள் ஓரம் நின்று ஓலமிட மட்டும்தான். அல்லது, கடமையைச் செய்தோமென்ற திருப்தியில் தீவிரவாதத்திலோ, வேறெதாவது வாதத்திலோ கலந்து வெகு நிச்சயமாக ஒடுக்கப்படவேண்டியதுதான். அல்லது, கண்டு பொருமும் ஒருவரிடம், நீ வந்து புரட்சி செய்யேன் என்று கேள்வி கேட்கலாம். இன்று பாதுகாப்பாகவும், நாளை பணக்காரனாகவும் இருந்து கொள்வதற்கான வழிமுறைகளைப் பார்த்து ஒதுங்கிக்கொள்ளலாம்.

எழுதுவதைப் படித்து பொதுக்கருத்து உருவாகும் காலம் இன்னும் மிச்சமிருக்கிறதா? அறிவுரீதியில் மக்களைத் திரட்டிய புரட்சி என்ற ஒன்று சாத்தியமா? வலியை உணர்ந்த மக்களின் குரல்வளை முறிக்கப்பட்டிருக்க, மற்றவர்கள் அதில் நூற்றிலொரு பங்கேனும் உணர முடியுமா? அவரவர்க்கான எலிப் பந்தயமும், ஊடக மயக்கமும் அதற்கு வழி விடுமா?

Saturday, December 27, 2008

சாதி அமைப்புக்கு உயிர் கொடுப்பது இட ஒதுக்கீடா?

சென்னைப் பல்கலைக்கழகத்தின், அஞ்சல் வழி இளங்கலைப் பொருளாதாரப் படிப்பின் 'இந்தியப் பொருளாதாரம் - பிரச்சினைகளும், கொள்கைகளும்' என்ற ஆங்கில வழி பாடப் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தேன். (Indian Economy - Problems and Policies)

சொற்பிழைகளும், இலக்கணப் பிழைகளும் மலிந்து கிடக்கின்றன. அதுவல்ல பிரச்சினை இங்கு.

முதலிரண்டு பாடங்களில், பொருளாதாரத்தில், மற்ற காரணிகளுடன், சாதி அமைப்பின் தாக்கத்தைக் குறித்தும் விவரிக்கப்படுகிறது.

அவற்றில் கீழ்க்கண்டவை கூறப்படுகின்றன.

சாதி ரீதியிலான தொழில் என்ற கட்டுப்பாடு, பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக இருக்கிறது. (தொழிலை விருப்பம், திறமை சார்ந்து தெரிவு செய்ய இயலாததால்)
தீண்டத்தகாதோர் என்றொரு பிரிவை வகுத்து அவர்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம், சாதி அமைப்பு, மனிதத் திறனை வீணடிக்கிறது.


இது போன்ற இன்னும் சிலவற்றைக் கூறிவிட்டு, கடைசியாக நிறைவு செய்யும் பத்தி இதுதான்.

இந்திய அரசியலமைப்பு சாதி சார்ந்த ஏற்றத்தாழ்வு காண்பிப்பதைத் (Discrimination) தடை செய்தாலும், சமீபத்திய இட ஒதுக்கீட்டுத் திட்டம் சாதி அமைப்பைப் பலப்படுத்துவதாக உள்ளது. போட்டித் தேர்வுகள் மூலம் இதன் தாக்கம் குறைக்கப்பட்டபோதும், சாதி அமைப்பு இன்னும் வலுவாகவே உள்ளதாக எப்ஸ்டீன் கூறுகிறார்.


ஆக, இட ஒதுக்கீடு அரசியலமைப்புக்கு எதிரானதென்று சொல்லி, போட்டித் தேர்வுகள் இட ஒதுக்கீட்டின் தாக்கத்தைக் குறைப்பதாகச் சொல்லி, இட ஒதுக்கீடு சாதி அமைப்பைப் பலப்படுத்துவதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

இட ஒதுக்கீட்டினால் சாதி அமைப்பு வலுப்படுவதாகச் சொல்வது ஸ்கார்லட் எப்ஸ்டீனின் கருத்தா அல்லது இப் புத்தகத்தை எழுதிய விரிவுரையாளர் முருகானந்தம் (DRBCC Hindu College) அவர்களது கருத்தா என்று தெரியவில்லை. யாராயினும், இப்புத்தகத்திலேயே ஒத்துக்கொள்ளப்பட்டுள்ள சாதி அமைப்பின் தீமைகளைக் களைய, அனைத்து சாதியினரையும் பொருளாதாரத்தில் சமபங்கெடுக்கச் செய்ய, இட ஒதுக்கீட்டைத் தவிர வேறு என்ன வழியென்று ஒன்றையும் கூறவுமில்லை.

ஒருவேளை, முடிவு கூறாமல், அலசலொன்றை நடத்துவதுதான் இதன் நோக்கம் என்றாலும், இட ஒதுக்கீடு சாதி அமைப்பைப் பலப்படுத்துவதாகச் சொல்வது நகைச்சுவையாக இருக்கிறது. சாதி இல்லையென்று சொல்லி விட்டு, பள்ளியில் ஏன் சாதி கேட்கிறார்கள் என்று கேட்பவர்களின் புளித்துப் போன, விஷமத்தனமான வாதம், பல்கலைக்கழகப் பாடத்திலும் எதிரொலிப்பது வேடிக்கைதான்.

புத்தகத்திலிருந்த பகுதிகள் ஆங்கிலத்தில், அதில் இருந்தவாறே.



The close and rigidities between caste and occupation prevent occupational mobility vital to economic transformation.

Another defect of the caste system is the existence of a class of untouchables who can never move up the social ladder. This has resulted in waste of human talents and potentialities.



Rigid rise between caste and occupation restricts occupational mobility and supply of efforts



Though our Indian constitution prevents discrimination by caste, the recent policy of reservation has lead to the strengthening of this institution. Even if its influence has reduced due to selection of individuals by competitive exams, it is still a very much living institution, according to Epstein.

Saturday, May 17, 2008

உணர்வுக்கிழம்

முன்னோரின் அலங்காரங்கள்
அருவெறுப்பூட்டுவன
மேலிரண்டு வரிகள் போன்றே!
தன் மனதைத் தைத்து
அதனூடாய்ப் பிறந்தன தவிர்த்து
எதைத்தான் ரசிக்க இயலும்?
சென்ற நொடியிற் பிறந்தன‌
வெட்கமூட்டுவன தவிர்க்கவியலாது.
அறியப்படுமுன் வெறுக்கப்படுதலே
பிறப்பனவற்றின் ஒரே விதி போலும்.
தன்சந்ததி உண்டு வாழும்
என் உணர்வுக்கிழம் எதுவோ, யாரோ?

Saturday, December 08, 2007

மூத்திரக் கடுப்பும், சிரிப்பு போலீசும்

நடிகை குஷ்பூ அவங்க கால் மேல கால் போட்டா, இந்து முன்னணிக் காரய்ங்களுக்கு மூத்திரக் கடுப்பு வருதாம். நமக்கு மூத்திரக் கடுப்பு வந்தா கொல்லைக்குப் போவோம், இவிங்க கோர்ட்டுக்குப் போறாய்ங்க. இனி ஒவ்வொரு நீதிபதியும் எங்க கோர்ட்டுக்கு வாங்க, எங்க கோர்ட்டுக்கு வாங்கன்னு குஷ்பூவுக்கு இன்விடேஷன் அனுப்புவாய்ங்க. என்ன எழவுய்யா நடக்குது தமிழ்நாட்டுல?

Wednesday, November 14, 2007

வீர வணக்கம்!

உணர்வொன்றும் மரத்து விடவில்லை, உறவை மறந்து விட
அறிவின்னும் அழிந்திடவில்லை, உண்மை உணராதிருக்க
இதயம் ஒன்றும் கல்லன்று, ஈழத்தமிழர் நிலை கண்டும் காணாதிருக்க.

என் அலுவலக அறைப் பலகையில்...


Tuesday, November 06, 2007

இந்த முறையும்

சாலையோரக் கற்சுவரில்
பாசி பூத்திருக்கும் மழைக்காலம்.
நம்மில் உற்சாகம் போல
காற்றில் ஈரம் அடர்ந்திருந்தது.
நாம் நடந்து கடந்தோம்
தோப்புகளையும், வயல்களையும்,
வண்ணத்துப் பூச்சிகள் போல.
மரியாதை கருதியல்ல
மகிழ்வால் புன்னகைத்தோம்
அது நமது மொழியாயிருந்தது.
உன் அருகாமையோ
இதயத் துடிப்பை ஒன்றும் செய்யாத
இயல்பாயிருந்தது.
உயர எறிந்த இலவம்பூ
சுழன்று விழும் அழகு கண்டு
அதிசயித்துக் குதூகலித்தாய் நீ.
கனவுதான் என்றாலும்
உன்முகப் பரவசம் காண
செய்ய இயலாததொன்றுண்டோ
தேடிச் சலித்தேன் நான்.

Sunday, May 06, 2007

அழகே அழகு

ரொம்ப நாளாச்சு இங்க ஏதும் எழுதி. வேலை நிறைய; படிக்கணும்னு வாங்கி வச்ச புத்தகங்கள் நிறைய. தமிழ்மணம். கீற்று எல்லாம் படிக்கறதுக்கே நேரத்தைப் பொறுக்கிச் சேர்க்க வேண்டியிருக்கு. அப்படியே ராசா பக்கம் போய்ப் பார்த்தா, ஏறக்குறைய மூணு வாரத்துக்கு முன்னாடி 'அழகே அழகு'ன்னு உருகியிருக்கார். அதோட விட்டாரா, என்னையும் அதுல இழுத்து விட்டிருக்கார். என்னையும் ஞாபகம் வச்சிருக்கார்ங்கறதுல ரொம்ப மகிழ்ச்சி!

சரின்னுட்டு, நம்ம கண்ணுக்கு எதெல்லாம் அழகுன்னு யோசிக்கப் போனா, சிலது தேறிச்சு. அதை எழுதறக்கு முன்னால, ராசாவை இந்த விளையாட்ல கூப்பிட்ட அனு எதை அழகுன்றாங்கன்னு பாக்கப் போனேன். நம்ம பட்டியல்ல வர்றது எல்லாம் அங்கயும் இருக்கு. என்னடா இது மதுரைக்கு வந்த சோதனைன்னு நினைக்காம, அப்படியே இங்க எழுதிருக்கேன்!

ரெண்டு வாரம் முன்னாடி என் நண்பரோட பொண்ணு நந்தனாவோட ரெண்டாவது பிறந்த நாள் விழாவுக்குப் போயிருந்தேன். அங்க வந்திருந்த குழந்தைகள், அவங்க விளையாட்டு எல்லாம் பாத்துக்கிட்டிருக்கும்போது இன்னொரு நண்பர்ட்ட சொன்னேன். 'சென்னைக்குப் போயிடலாமான்னு வர்ற எண்ணத்தை மாத்த எனக்குத் தெரியிற ஒரே காரணம் இந்தக் குழந்தைகள்தான்'னு. சென்னையில் குழந்தைகள் இல்லன்னு அர்த்தமில்ல. ஆனா, இங்க பழகின குழந்தைகளை எல்லாம் பாக்க முடியாமப் போயிடுமேன்னுதான். ஆக, அழகுன்னு நினைச்சா முதலில் வர்றது குழந்தைகள்தான். 2002-ல வாடகை வீடு பாக்க சாவி கேட்டுக் கீழ் வீட்டுக் கதவைத் தட்டும்போது திறந்த ரெண்டு குழந்தைகள் கிருத்திகாவும், உத்ராவும், அதே கட்டடத்துல இருந்த காவ்யாவும், மனிஷாவும், பக்கத்து வீட்ல இருந்த மேக்னா, இப்போ நண்பர்கள் வித்யா - சாகர் தம்பதியின் குழந்தை நந்தனா, இப்போ மேல் வீட்ல இருக்கிற தெலுங்குக் குடும்பத்துல என்னைப் பாத்து (அல்லது என் தாடியைப் பாத்து) ஏனோ பயப்படுற குழந்தை அப்படின்னு நீளும் பட்டியல். இவங்க மட்டுமில்ல, கடைல, தெருவில அப்படின்னு பல இடங்களிலும் பாக்கிற குழந்தைகள், எந்தவொரு சூழ்நிலையையும் மறக்கடிச்சு என்னையும் குழந்தையா மாத்திடுறதால, அதுதான் பேரழகு.

அப்புறம், யாரையும் அழகாக்கக் கூடிய சக்தி கொண்ட புன்னகை அழகு. அதுவே, குழந்தைகளின் புன்னகை, ஆகா அதுதான் சொர்க்கம்.

2002-ல பிடிச்ச வாடகை வீடுன்றது ஒரு சின்ன அறை, மூணாவது மாடில. இடுப்புல துண்டை மட்டும் கட்டிக்கிட்டு, ஆடி, குதிச்சு, வானம் பார்த்துத் தரையில படுத்துக்கிட்டு, உடம்பு மேல பட படன்னு பலமாவோ, சின்ன சின்ன ஊசி மாதிரி வேகமாவோ, அல்லது வெறும் தூறலாவோ வந்து தழுவுற மழையை அனுபவிச்சதுண்டு. அந்த மழை அழகு.

மழை நின்னப்புறம், தெருவில இறங்கி நடந்துகிட்டே ரோட்டோரம் இருக்கிற மரங்களோட தாழ்ந்த கிளையில இருக்கிற இலைகளை அசைச்சு அந்தத் தூறலில் சிலிர்த்ததுண்டு. பக்தி தலைக்கேறிய காலத்துல கோவில் மணியடிச்சப்போ வந்த உணர்ச்சி, சிலிர்ப்பெல்லாம் கூட கிட்ட வர முடியாதுன்னு தோணுது. மழை இல்லைன்னாலும், இந்த மரங்கள், செடிகளை அப்பப்போ தொட்டுக்கிட்டு, தடவிக் கொடுத்துக்கிட்டு நடக்கறது வழக்கமாயிடுச்சு. நம்ம கண்ணுக்கு அழகா இருக்கணுமேங்கறதுக்காக வெட்டுப்பட்டு நிக்கிற செடிகளைக் கண்டா கண்ணீர் வர்றது மட்டும்தான் குறை. இந்த மரங்கள், கிளைகள், இலைகள், மலர்கள் எல்லாம் அழகு.

அலுவலக வளாகத்துலயும், பூங்காக்கள்லயும், ஒண்ணா உக்காந்துக்கிட்டு, கண்களால பேசிக்கிட்டு, பொய்க்கோபம் காட்டிக்கிட்டு, அன்பையோ ஆறுதலையோ வண்டி வண்டியாக் கொட்டும் கண்களோட பாத்துட்டிருக்கிற ஜோடிகள் அழகு.

பெண்கள் அழகு; மீட்டிங்-ல உக்காந்துக்கிட்டு நான் கிறுக்கிற ஓவியங்கள் அழகு; கன்னட எழுத்துக்கள் அழகு, அதிலயும் வீணை வடிவத்துல இருக்கிற சில எழுத்துக்கள் இன்னும் அழகு; பேருந்தில உக்காந்துக்கிட்டிருக்கும்போது திடீர்னு கேட்கிற பெண்-தமிழ்க் குரல்கள் அழகு.

தமிழ் அழகு. இசை அழகு. இசை, நாட்டியம் அழகு. எல்லாத்துலயும் ஒளிஞ்சிருக்கிற தாள லயம் அழகு. கவிதை அழகு. நியாமான கோபம் பேரழகு. சாந்தமும் அழகு.

காதல் அழகு, நினைவுகள் அழகு. என்ன சொல்ல, வலிகளும் அழகு.

பழைய கோயில்கள் அழகு; பக்தி அழகு; உறவுகள் அழகு; உறவொண்ணும் இல்லைன்னாலும், மனசு கனிஞ்சு வர்ற அன்பு அழகு;

மழையை ரசிச்சு நடக்கும்போது, ஒழுகுற குடிசை வீட்டைப் பாத்தவுடனே, பாடிக்கிட்டிருந்த 'சின்னச் சின்ன மழைத் துளிகள்' பாட்டை நிறுத்த வச்சு, உள்ள அழுற குழந்தையோட சேர்ந்து மனசை அழ வச்சு, மழையோட சேர்ந்து கண்ணீரை ஓட வைக்கிற மனசாட்சி அழகு.

'கூரையின் ஓட்டை வழி நட்சத்திரம்' பாட்டு அழகை ரசிக்கும்போதே, வலிக்கிற மனசு அழகு. தன்கிட்ட இருக்கிற அழுக்கை எல்லாம் உடனே பாத்துக்கிற மனசு பேரழகு. அதுக்கு வழி செஞ்ச அறிவு இன்னும் அழகு. ஆக மொத்தம் எல்லாம் சேர்ந்து அடிக்கிற குழப்பமும் அழகு. அது முடிஞ்சு வர்ற தெளிவும், அதுக்குள்ள இருக்கும் குழப்பங்களும் அழகு. அந்தக் குழப்பங்களை அப்போதைக்காச்சும் மறக்கடிக்கிறது குழந்தையோ, மழையோ, உறவோ, அன்போ, இசையோ எதுன்னாலும் அது அழகு.

Saturday, April 07, 2007

பார்வையாளனின் துயரம்

அந்தச் சக பயணி, தன்னை ஒரு பார்வையாளன் என்று கூறிக் கொண்டான்.
'கடைசி வரை வெறும் பார்வையாளனாகவே இருந்து விடுவதாக உத்தேசமோ?' என் கேள்விக்கு ஒற்றைச் சொல்லில் பதில் வந்த பிறகுதான், நான் அதை எதிர் பார்த்திருக்க வேண்டுமென்று நினைத்தேன்.

பார்க்கலாம்.

இப்போது என்னதான் பார்த்துக் கொண்டிருக்கிறாய்?

நான் பார்ப்பதாகப் பாசாங்கு செய்து கொண்டு தேடிக்கொண்டிருக்கின்றேனோ என்று.

என்று?

பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

அலுத்துப் போகவில்லை?

களைத்தும் போவதுண்டு.

மகிழ்ச்சியை உணர்ந்ததுண்டா?

மகிழ்ச்சியென்று காணும் வரை, உணர்ந்ததுண்டு.

துயரமொன்றும் இருக்காதே!?

உனக்குத் தெரியாது. பார்வையாளனின் துயரம். கொடிது, பெரிது, நெடிது...

ஆகா... அவரவர் துயரம்!

சரிதான். இந்தப் புன்னைகையோடு நிறுத்திக்கொள், நீ ஆசீர்வதிக்கப்பட்டவனாகவே உன் வாழ்வைத் தொடர விரும்பினால்.

உற்றுப்பார்த்தேன் அவனை.

திடீரென்று மறைந்திருந்தானென்றால், எவ்வளவு சுவாரசியமாய் இருந்திருக்கும்! அதுதான் வேண்டாம், கொஞ்சம் உணர்ச்சியையாவது முகத்தில் காட்டக் கூடாதா?

அவனோ, என்னைத் திரும்ப உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.

விமான நிலையத்தில் நுழைந்தபோது...

ஆசையுடன் வளர்த்த தாடி
திடீரென்று அந்நியமாயிற்று.
உலகின் சந்தோஷத்தில்
பங்கு பெற மறுக்கும் என் பிடிவாதம்
எனக்கே குமட்டிற்று.
'உப்பு கொஞ்சம் தூக்கல்'
ஒப்புக்குக் குறைசொல்லும்
நாத்தனார் குரலாய்,
என் முகத்தில்
இன்னும் அப்பியிருக்கிறது
முப்பது நாள் தாடி.

Friday, February 16, 2007

தினமலர் - ஐகோர்ட்

நீதிமன்றம் என்ற சொல் புழக்கத்தில் உள்ளபோதும், அதைப் பயன்படுத்தக்கூடாது என்று அப்படியென்ன உறுதி தினமலருக்கு? மற்ற எல்லா செய்தித்தாள்களும் நீதிமன்றம் என்று எழுதும்போது தினமலர் மட்டும் கோர்ட் என்ற எழுதும் காரணம் என்ன?
அதுவும் போக, தமிழக அரசு, தமிழில் வெளியிடும் அறிக்கையில் உள்ள நீதிமன்றம் என்ற சொல்லையும், கோர்ட் என்று மொழிபெயர்த்து ஒரு தமிழ்ச் செய்தித்தாளில் அச்சிட வேண்டிய அவசியம் என்ன?
'ஐ'கோர்ட் என்று சொல்லும்போது ஆங்கில அறிஞர்களின் அழகுணர்ச்சி அடிபடுவதன் வலியுணர்ந்து கொள்ளுமா தினமலர்?

Tuesday, February 13, 2007

காதலிலே என்ன ஆச்சு?

( ம்ம்.. என்னென்னமோ ஆச்சு... :)


நேற்றுவரை வைத்திருந்த கொள்கையெல்லாம் துச்சமாச்சு - உன்
வேல்விழியில் விழுவதுவே பிறந்தபயன் என்றாச்சு!
நீநடந்த பாதையெல்லாம் என்பள்ளிக் கூடமாச்சு - என்
நாநடக்கும் ஒருபாதை உன்பேர்தான் என்றாச்சு!
நண்பர்கள் கூட்டத்தை நான் மறந்து நாளாச்சு - என்
அன்பும் ஆசையும் உனைக்கண்டு ஆளாச்சு!

அதிகாலை எழுப்புகிற மணிஉந்தன் நினைவாச்சு - தினம்
எனைத்தூங்க வைக்கின்ற தாலாட்டும் அதுவாச்சு!
நாள்முழுதும் உன்நினைவே நெஞ்சுக்குள் ஓடலாச்சு - நான்
தூங்குகின்ற சிலபொழுதும் உன்கனவில் நிறைஞ்சாச்சு!
காண்பதெல்லாம் உன்நினைவைத் தூண்டுகின்ற தோதாச்சு - உனைக்
காணாத நாளெல்லாம் பூவிழந்த நாராச்சு!

எதிர்காலம் என்னவென்ற குழப்பமது தீர்ந்தாச்சு - நாம்
மகிழ்வோடு வாழ்வதுதான் வாழ்வென்று ஓர்ந்தாச்சு!
காவிகட்ட நினைச்சிருந்த காலமெல்லாம் போயாச்சு - என்
ஆவியுடன் அத்தனையும் உனக்கென்று ஆயாச்சு!
என்வழி எனக்கென்ற அகங்காரம் தீர்ந்தாச்சு - இனி
உன்வழியில் துணையாக வருவதென்று தீர்வாச்சு!

ஊருலகம் உற்றார்கள் சொல்வதெல்லாம் தூசாச்சு - உன்
பார்வையிடும் பணியொன்றே என்வாழ்வில் பெரிதாச்சு!
உனதாசை நிறைவேற்ற உண்டானது நானாச்சு - இனி
எனக்கான தென்றிங்கு ஓருயிரும் நீயாச்சு!
பழங்காலம் சொல்லிவைத்த சாதிமதப் பொய்ப்பூச்சு - அதைப்
பொய்யாக்கி ஒன்றாக ஒலிக்கட்டும் நம்மூச்சு!

காதல் - ஒரு தலைப்பில் பல கவிதை

(காதலர் தினத்தை முன்னிட்டு...)

*********************

தயங்கி நகரும்
நத்தையின் மேல்
இல்லையென்ற ஒற்றைச் சொல்லாய்
வண்டிச் சக்கரம்
ஏறி நசுக்கிற்று.

எத்தனை முறை
வெளியேற்றினாலும்
குட்டிகளை மீண்டும்
ஒளித்துக் கொணர்ந்து
குடியுரிமை கேட்டுக் கொண்டுதானிருக்கிறது,
வீட்டுப் பூனை.

தவறில்லை
தாய்ப்பாசம்
மட்டும்தானா?


*********************

மறக்கச் சொல்கிறார்கள்!
மறக்கத்தான் வேண்டும்
இயன்றால்,
இறக்கும்போதேனும்!

*********************

நிலை மறந்து செயல் மறந்து நிலவுக்கும் போய் வரலாம்
கலையுடனே காவியங்கள் செழிப்புற்றே வளர்ந்திடலாம்
துணையொன்றின் துயர் தீர்க்க உயிர் தரவும் தூண்டிடலாம்
காதலினால் காலமெலாம் மகிழ்வுற்றே நீண்டிடலாம்!

பதில் வராத கடிதங்கள் பைத்தியமாய் ஆக்கிடலாம்
பதின்வயதுக் குழப்பங்கள் நிலைதழும்பாய் மாறிடலாம்
கழிவிரக்கப் புலம்பல்கள் கவிதையென்று பேர்பெறலாம்
காதலினால் பலவிதைகள் பாறையிலும் காய்ந்திடலாம்!

*********************

Thursday, February 01, 2007

சொற்சிலுவைகள்

சொற்களும்
நம்மைப் போன்றவையே!

கட்டாயம் ஒரு நாளில்,
நான் ஏன் பிறந்தேன்,
என்னால் ஆவதென்ன - என்று
அவற்றிற்கும் தோன்றத்தான் செய்கிறது.

பிறப்பித்தவன்
என்ற சுமையோடு,
அவற்றின் சிலுவைகளும்
எனக்கு.

சொற்களும்
சிலுவை போன்றவையே!
நான் அறையப்படுகிறேன்,
என் சொற்களில்,
என் சொல்லில்.

Sunday, July 09, 2006

கருத்து மோதல்

தொடங்கிற்று விவாதம்
விரைவிலேயே
சூடு பிடித்தது.
நாட்கணக்கில் கூர்படுத்திய
ஆயுதங்கள் மோதிக்கொண்டன.
கருத்து மோதல்.

முடிந்து திரும்புகையில்,
உடனிருந்தவை
எதிரியின் மேல் உரசி
இன்னும் கூர்செய்து கொண்ட
ஆயுதங்கள்.
எதிரி முகாமில்
கண்டெடுத்த
புதிய நவீன ஆயுதங்கள்
அதே
பழைய கருத்துக்கள்.

Tuesday, June 27, 2006

கடலில் சேர்ந்த ஆறு

நண்பர் ராசா என்னையும் ஒரு ஆறு பதிவு போடச் சொல்லியிருக்கார்.

என்ன எழுதறதுன்னு யோசிச்சா ஒண்ணுமே தோண மாட்டேங்குது. முதலாவது பேச்சுத் தமிழ்ல எழுதிப் பழக்கமில்ல. அப்புறம், சும்மா ஜாலிக்காக எழுதினதுமில்ல இது வரைக்கும். இப்பக் கூட, பிடிச்ச பாட்டு, படம்னு எழுத மனசு வரல. மயூரன் சொன்ன மாதிரி, இந்த மாதிரிப் பதிவுகள்ல சுய முன்னிறுத்தல் இருக்கறதுக்கான வாய்ப்புகளும் இருக்கு. அதாவது என்ன சொன்னா நம்மளைப் பத்தி நல்ல அபிப்பிராயம் உண்டாகும்னு தெரிஞ்சு அத எழுதறது. இப்பக் கூட, நான் பண்ணின தப்புகளைப் பத்தி எழுதினாக் கூட, அதுக்கும் பின்னாடி எனக்கு இருக்கிற உள்நோக்கம் எனக்குத் தெளிவாத் தெரியும். என்ன பண்றதுங்க, இப்படியே பழகிப் போச்சு. இதில இருந்து தப்பிச்சு எழுதலாம்தான் பொதுவா. ஆனா என்னைப் பத்தி, என்னோட குழப்பங்களைப் பத்தி, என்னோட பிரச்சினைகளைப் பத்தி மட்டுமே எழுதத் தோணுது. அவ்வளவு சுயநலம்.

இதோ, இப்ப நான் எட்டு வயசுல பண்ண ஒரு காரியம் பத்தி எழுத ஆரம்பிச்சேன். இதை ஊருக்கே சொல்லணுமா-னு ஒரு கேள்வி மனசுல. அவ்வளவுதான், அதை அழிச்சுட்டேன். இப்போ என்னதான் எழுத?

அதனால, நான் பண்ணியிருக்க வேண்டாம் அல்லது பண்ணியிருக்கணும்னு இப்போ நினைக்கிற, ஊருக்கே தெரிஞ்சாலும் தப்பில்லன்னு நான் நினைக்கிற ஆறு விஷயங்களை மட்டும் சொல்லப் போறேன். அடைப்புக்குறிக்குள்ள இருக்கறது என்னோட மனசாட்சி.

1. பத்தாவது படிக்கும்போது, பள்ளிக்கூடத்த விட்டு வேற பள்ளிக்கு மாறிப் போற ஒரு முன்னாள் நண்பன், வெளியே இருந்து நண்பர்களை அனுப்பிக் கூப்பிட்டப்போ, வீறாப்பா மாட்டேன்னு சொல்லாம இருந்திருக்கணும். ஒரு வருஷம் கழிச்சு அப்பா கூட வண்டியில உக்காந்து போறப்போ, அதே மாதிரி அவனும் அவங்கப்பா கூட வந்தான். ஒரு நொடி திரும்பிப் பாக்கத்தான் நேரம் இருந்துச்சு. அவனும் பாத்த மாதிரி இருந்தது. அவனுக்கும் அப்படித்தான் இருந்துருக்கும். (அப்போ, பெரிய கோவக்காரன், ஆனாலும் பின்னாடி வருத்தப்படற நல்ல மனசுக்காரன். அப்படித்தானே?)

2. பன்னிரெண்டாவதுல, தமிழ் செய்யுள் வகுப்பு நான் எடுத்தப்போ, வேதியியல் வாத்தியார் மேல இருக்கிற கோவத்துல, பெண்களைப் புகழ்ந்து இருந்த ஒரு கவிதை/செய்யுளைக் குதறி எடுத்து, மொத்தமா பெண்களைப் பத்தித் தப்பா சொல்லாம இருந்திருக்கணும். குறைஞ்சபட்சம், அதைப் பத்தி ஒரு பொண்ணு அடுத்த நாள் கேட்டப்போ, உள்மனசு சொன்ன மாதிரி அது தப்புனு ஒத்துக்கிட்டிருந்திருக்கணும். (ஓஹோ, வகுப்புல பாடம் எடுத்தீங்களோ? வாத்தியாரையே பகைச்சுக்கிட்டீங்களோ?)

3. அதே வருஷம், திருப்புத் தேர்வு எழுதும்போது வந்த பொருளாதாரப் பிரிவுக்குப் பாடம் எடுக்கிற டீச்சர், அரையாண்டுல எத்தனை பாடத்துல நூத்துக்கு நூறுனு ஆசையாவும், அக்கறையாவும் கேட்டபோதாவது, பதில் சொல்ல முடியாத உண்மை உறைச்சு கொஞ்சம் ஒழுங்காப் படிச்சிருக்கணும். ('நான் நல்லாப் படிச்சவன்தான், வயசுக் கோளாறு' அப்படின்னு சொன்னா ஒரு ஹீரோதான?)

4. என்னோட மாமா எனக்கு நியூமராலஜி பாத்து, பேரோட ஸ்பெல்லிங்கையும், கையெழுத்தையும் மாத்தச் சொன்னப்போ தைரியமா, எனக்கு நம்பிக்கை இல்லனு சொல்லியிருக்கணும். இப்போ அவங்களுக்கு எழுதுற மெயில்-ல மட்டும் அந்த ஸ்பெல்லிங் பயன்படுத்துற போலித்தனத்துல இருந்து தப்பிச்சிருக்கலாம். (பகுத்தறிவு?)

5. மனசுக்குப் பிடிச்ச பொண்ணு உக்காந்து பாத்துட்டிருக்கிற உற்சாகத்துல, உயரமான மரங்களுக்கு இடையில கட்டி வச்ச வலையில (இந்த வயசுல) குட்டிக் கரணம் போட்டுக் காட்டாம இருந்திருக்கணும். இப்போ எல்லாம் முடிஞ்சப்புறம், நினைச்சா என் மேலயே வர்ற கோவத்துல இருந்தாவது தப்பிச்சிருக்கலாம். ம்ம்ம்ம்.... ஒரு விதத்துல இது சிரிப்பாதான் இருக்கு. அவ்வளவு மோசமில்லை. (ஓஹோ! மூன்றாம் பிறை கமல்னு நினைப்பா?)

6. எத்தனையோ நண்பர்கள், தெரிஞ்சவங்க, சொந்தக்காரங்க எல்லார்கிட்டயும் கட்டாயம் கடிதம் போடறேன், ·போன் பண்ணறேன்னு சொல்லாம இருக்கலாம். குற்ற உணர்ச்சியாவது இல்லாம இருக்கும்.

இப்போ யோசிச்சு என்ன பண்ண? ஒண்ணும் பண்ணமுடியாது. அதாவது, ஆத்துத் தண்ணியைக் கடலுக்குப் போனப்புறம் குடிக்க முடியாது. காலம் கடந்து போச்சு. பெருமூச்சை விட்டுட்டு, இந்தப் பதிவையும் முடிப்போம்.

சரி, நான் ஒரு ஆறு பேரைக் கூப்பிடணுமாமில்ல! நான் அதைச் செய்யப் போறதில்ல. ஏன்னா, இந்த ஆறும் கடல்ல சேந்தாச்சு! (நம்ம பேருக்கு அர்த்தம் தெரியும்ல?)